சனி, 13 அக்டோபர், 2018

எம்.கே.டி

எம்.கே.டி
==========================================ருத்ரா

"அன்னையும் தந்தையும் தானே..."
"கிருஷ்ணா முகுந்தா..."
அசோக் குமாரில் அந்த‌
தாலாட்டுப்பாடல்..
இன்னும் எத்தனையோ பாடல்கள்..!
பிரபஞ்சமே இழைந்து குழைந்து
நம் உயிர்களில் ஊடுருவும்.

அந்த‌ பாடல்களில்
இன்னும் அந்த சிங்கத்தலையை
சிலிர்த்துக்கொண்டு வரும்
எம் கே டி யின் இசை
யுகங்கள் யுகங்கள் யுகங்கள்
என்று
தாண்டிக்கொண்டே இருக்கும்.
ஏதாவது ஒரு புதிய கடவுள் தோன்றி
இந்த இசைச்செல்வனை
தட்டி எழுப்பி
நமக்குத்தரமாட்டானா?
என்ற ஏக்கத்துக்கு மட்டும்
மரணங்களே இல்லை.
தங்கத்தட்டில் தான் சாப்பிடுவாராம்.
வைர மோதிரங்கள்
விரல்களில் விளையாடுமாம்.
இசை என்பது நாதப்பிரம்மம் என்றால்
அந்த பாடல்கள் எனும்
பிரம்மோத்சவத்திற்கு
பொன்னும் வைரமும்
எவ்வளவு வேண்டுமானாலும்
குவிக்கலாம்.
கர்நாடக இசை என்றால்
அர்த்தம் புரியாத அவஸ்தைகள் நிறைந்த
ஓசைக்கூட்டம் என்று
உணர்ந்த போதும்
அந்த இனிமையான இசை
மேட்டுக்குடிகளின் சன்னல்களையும்
பிதுங்கிக்கொண்டு
வெளியே அருவியாய் கொட்ட‌
சினிமா தான் உதவியது.
அந்த இனிமையின் ஒலிப்பிரளயம்
பட்டி தொட்டிகள் கூட‌
புகுந்து பாய்ந்ததால்
அவர் படம்
மூன்று தீபாவளிகளையும் தாண்டி
புகழின் பாட்டசுகளை
வெட்டித்துக்கொண்டே
தியேட்டரில் ஓடி
வரலாறு படைத்ததே!
வரலாறு வழி விட்டு அந்த மாமனிதனுக்கு
வரவேற்பு அளித்ததை
யாரும் மறக்க இயலாது.
சிறைக்குள்ளும் அவர் அடைத்து வைக்கப்பட‌
அந்த கறைகள் கூட கரைந்து போனது.
இன்று இசைத்திருவிழாக்களில்
அதிகம் அடைத்துக்கொண்டிருப்பது
செவிகள் கிழிபடும்
மின் இசைக்கருவிகளும் மற்றும்
விஞ்ஞானத்தின் லேசர் படலங்கள் மட்டுமே.
தூய ஒலி மட்டுமே
ஒரு இனிய புயலை வாரி இறைத்த‌
அன்றைய அற்புதங்கள்
ஈடு இணையற்றவை!

=================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக