புதன், 14 செப்டம்பர், 2016

காவிரி போற்றுவோம் காவிரி போற்றுவோம்

காவிரி போற்றுவோம்! காவிரி போற்றுவோம்!
==================================================================
ருத்ரா இ பரமசிவன்


கன்னட தேசத்தில்
தமிழன் லாரிகள்
தீப்பிடித்து எரிகின்றன..
அனுமன் சேனையா ?
அதர்மன் சேனையா ?
காவிரி சீதையின் சீலையில்
காவிரி நீரையே
பெட்ரோல் ஆக்கி
பேய் ஆட்டம் போடுவதேனோ.?
சட்டம் ஓழுங்கு கெட்டுப்போச்சு
"ஷரத்தை" கையில் எடுத்திடலாம்  என
காவிக்கனவுகளின் தீக்கொழுந்தே
இந்த லங்கா தகன அரங்கேற்றம்.
தமிழன் உன் உடன் பிறப்பே
கன்னடத்து அன்பு  சகோதரனே
காலச்சுவடுகள் பின்னோக்கி
கவனம் திருப்புவாய் சகோதரனே .
நம்மை  அவர்கள் குரங்காக்கி
நம் வாலிலேயே தீ வைத்து
நம்மை அன்று எரித்தார்கள்.
தீயவன் அரக்கன் என்றெல்லாம்
திரித்து புரட்டி புராணம் ஆக்கி
புரோட்டா சுட்டு தின்பதற்கு
நம் தலையையே சுட்டுக் பொசுக்கிடுவார்,
உன் வாலின் மீதே நெருப்பை வைத்து
அராஜகங்கள் நடத்துகின்றார் ..இந்த
அரசு கலைப்பு துர் நாடகத்தை
அனுமதிக்கலாமா கர்நாடகமும்?
காவிரித்தண்ணீர்ச் சொட்டுக்கள்
எந்தன் ரத்தம் உந்தன் ரத்தம்
இரண்டும் கலந்த கலவை தான்.
நம் தாகம்,  பசி எல்லாம் இங்கு
நாமே அறிவோம் நாமே உணர்வோம்.
நமக்கு நாமே கோர்ட்டு ஆவோம்.
பாழாய்ப் போன அரசியலும்
பணப்பட்டுவாடா தேர்தல்களும்
வாக்கு வங்கி வாய்க்கால் வெட்டும்
சாதி மதத்துப்பூதங்களும்
குறுக்கே வந்து மறிக்காமல்
உண்மைத் திராவிட நேயத்தில்
ஓர் ஒற்றுமை இங்கு கட்டிடுவோம்.
அதன் தங்கத்தருணம் இதுவே தான்.
தயங்கிட வேண்டாம் விரைந்திடுவீர்.
காவிரி போற்றுவோம் காவிரி போற்றுவோம்
காழ்ப்புக்கு இங்கு இடமில்லை.
திராவிட ஒற்றுமை அரசியல் தான்
காவிரி ஆற்றைக் காப்பாற்றும்!

======================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக