வெள்ளி, 30 செப்டம்பர், 2016

"டி.எஸ் எலியட் எழுதிய "உள்ளீடற்ற மனிதர்கள் ..."(4)






"டி.எஸ் எலியட் எழுதிய  "உள்ளீடற்ற மனிதர்கள் ..."(4)
=================================================
ருத்ரா இ பரமசிவன்



( செப்.2. 2001 "திண்ணை" இதழில் வெளிவந்த
 என் மொழிபெயர்ப்பு கவிதையின் மீள்பதிவு )
               
( இது மொழிபெயர்ப்பு எனும் குறுகிய வடிவம் இல்லை.அந்த மகத்தான கவிஞனின் அகம் நுழைந்து அவன் எண்ணக்கீற்றுகளை நாற்றுகளாக
நடவு செய்யும்  முயற்சியே இது.)

==================================================================


இங்கே விழிகள் இல்லை.

ஒளியின் சுவடுகளும் இல்லை.

இருட்டில் நனைந்த

கருவிழிகளில்

விடியல் வெளிச்சத்தின்

வேர்கள் பாயவில்லை.

இவை உயர்ந்த சிகரங்கள் அல்ல.

இருளின் படுகுழி.

இறந்துகொண்டிருக்கும்

நட்சத்திரங்களை

புதைக்கத்தயாராகும்

பள்ளத்தாக்கு இது.

மரணச்சுவைக்காக

மல்லாந்து படுத்துக்கொண்டு

வாய் பிளந்து

உடைந்துகிடக்கும்

அந்த தாடைகளில்

என்ன வார்த்தைகள் எதிரொலிக்கும் ?


மனிதனின் வீடு

வெறும் 'ஃபாசில்களின் ' சாம்ராஜ்யமா ?

சந்திப்பு நிகழும் களம் இது.

ரதத சதைகளிலிருந்து

ஒளியைத் தேடுங்கள்.

சிரையும் தமனியும் சந்திக்கும்

மயிர்ப்பின்னல் குழாய்களிலிருந்து

கசியும் இரத்தத்தில்

உதிக்கும் சூாியனின்

சிவப்பைத் தேடுங்கள்.

கருப்பு இருட்டின்

ரத்தக்குழம்பிலிருந்து

மின்னல் பூக்களை பறித்தெடுங்கள்.


ஆத்மா என்றொரு

அடங்காத வார்த்தைக்குள்

அது அடைபடுமுன்

அதில் அடைந்து கொள்ளுங்கள்.

எதற்கு இன்னமும் நாம் நடுங்க வேண்டும் ?

தேடல் சகதியினுள் வீழ்ந்து

அதையே நம்மீது சுற்றி சுற்றி

ஆக்கிக்கொண்ட

புழுக்கூடு இது.

கனவுகளின் கனம் தாங்காமல்

வர்ணமயக்கங்களின்

வெக்கை தாங்காமல்

அந்த பிரபஞ்சம் ஒரு நாள்

தும்மல் போடுவது போல்

வெடித்த துடிப்புகளில்

தேடிப்பாருங்கள்.


பேசுவதற்கு நா எழவில்லை.

இந்த ஆற்றங்கரை யோரம்

ஞான ஸ்நானங்களுக்காக

காத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆறு உப்புகிறது.

வீங்கும் வெள்ளத்தில்

தண்ணீர் விடைக்கிறது.

கரை உடைப்புகளில்

ராட்சச கன்னிக்குடம்

உடைத்துக்கொண்டு

மரண ஓலங்களின் பிரசவம் !


உடல் திசுக்களுக்குள்

சின்னா பின்னமாய்

ஹிரோஷிமா நாகசாகிகள்...

கபாலக்காடுகளிலிருந்து

மீண்டும் முளைக்கப்போகும்

ஈடன் தோட்டங்கள்....

காட்சிகள் இல்லை

கண்கள் இல்லை.

அந்த கருப்பு முண்டமான

வானத்திலிருந்து

இங்கே துருவி துருவி

பார்த்துக்கொண்டிருக்கும்

அந்த 'துருவ ' நட்சத்திரம் மட்டுமே

நம் கண்கள்.

அவிந்து போகாத

நம் அமரக்கண்கள் அவை.


உதிர்ந்து போகாத

ஆயிரம் அடுக்கு இதழ்

ரோஜாப்பூ

உன் புருவமுனையில் குவிகிறது தெரிகிறதா ?

மூடுகின்ற வானம்

திறக்கின்ற ஜனனங்களின்

சாவிக்கொத்துகளை

கண்ணுக்குத் தெரியாத

அந்த விரல்களில் வைத்துக்கொண்டு

சுழற்றுவது

புலப்படவில்லையா ?

குண்டலினியை சூடேற்றி

மூளைச்செதில்களில்

தீயெரித்து தியானம் செய்ததில்

அந்த அர்த்தங்கள்

விழி திறந்தனவா ?


பரமண்டலத்து பிதாமகனுக்கு

வெட்டுக்கிளிகள் தின்னும்

இந்த குமாரன் யோவான்

காத்துக்கிடப்பது

தெரிந்து விட்டதா ?

விரியன் பாம்புக்குட்டிகள்

இரத்த நாளங்களுக்குள் பேசும்

இரகசியங்கள்

வெளிப்பட்டுவிட்டனவா ?

இந்த அந்தி வெளிச்சத்தில்

இறப்பு எனும்

இராட்சதப் பறவை இட்ட

எச்சத்தில்

மீண்டும் மீண்டும் பிறப்புகள்...!


நம்பிக்கைச்சுவடுகள்

நத்தை உழுத வரிகளாய்...

இந்த யாத்திரையில்

அங்குலம் அங்குலமாய்

கரையும் தூரங்கள்..

ஆனாலும்

விதைகளை தின்றுவிட்டு

செடிமுளைக்க

காத்துக்கொண்டிருக்கும்

உன் கனவுகளே

உன் தோள்பட்டையில் தொங்கும்

'ஜோல்னா பைகள் '..

நடை தளராதே !

உன் முழங்கால்களில்

வானம் இடறும்.

காலடியில்

நட்சத்திரக் கூழாங்கற்கள்

சர சரக்கும் சங்கீதமே

உனது உற்றதோழன்.

நடை தளராதே!



==========================================ருத்ரா இ பரமசிவன் 




(4rth part of "THE HOLLOW MEN" by T S ELIOT)


                 IV

    The eyes are not here
    There are no eyes here
    In this valley of dying stars
    In this hollow valley
    This broken jaw of our lost kingdoms
   
    In this last of meeting places
    We grope together
    And avoid speech
    Gathered on this beach of the tumid river
   
    Sightless, unless
    The eyes reappear
    As the perpetual star
    Multifoliate rose
    Of death's twilight kingdom
    The hope only
    Of empty men.

   
   =====================================================
              https://allpoetry.com/The-Hollow-Men


===========================================================


2 கருத்துகள்:

Siva Suryanarayanan சொன்னது…

அருமையான கவிதை. உள்ளத்தில் இனம் புரியாத வேதனையை விளைத்துவிட்டது .. கவிஞன் சிவ.சூரியநாராயணன்.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நன்றி! நண்பர் சிவசூரியன் அவர்களே.

கவிஞர்களுக்கு சொற்கள் தான் ரத்த சதையாய் உயிர் மூடிய பண்டமாய் இருக்கும்.டி எஸ் எலியட் அவர்களின் கவிதை வரிகளில் கள்ளி முட்கள் மனித முனகல்களின் ரணம் செறிந்த தடங்களாய் நான் கண்டிருக்கிறேன்.அது கவிதை அல்ல. அது ஒரு வலி.மண்ணின் வலி சூரியன் வரை சுட்டுத்துன்புறுத்தும் வலி.மனிதன் ஏன் இன்னும் வெறுங்கூடாக இருக்கிறான்.இன்னொரு மனிதனின் நிழல் அந்தக் கூட்டுக்குள் நுழைந்து கிடக்கும் தடயத்தை ஏன் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை? அந்த‌ அன்பு ஏன் அவனுக்கு புரிந்து கொள்ள முடியாத கடினமான கணிதம் ஆயிற்று? போர்க்கூச்சல்களும் பிணக்குவியல்களும் இந்த பூமியின்
அடிவயிற்றைக் கிழித்து எறிகின்றன.
உங்கள் கருத்துரையில் நீங்களும் இப்படி ஒரு காயம்பட்டவராய் இருக்கின்ற ஒரு உணர்வினை கண்டு மிக‌
நெகிழ்ச்சி உற்றேன்.
அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்


கருத்துரையிடுக