வெள்ளி, 16 செப்டம்பர், 2016

பேரறிஞர் அண்ணா

C. N. Annadurai.jpg
https://en.wikipedia.org/wiki/C._N._Annadurai





பேரறிஞர் அண்ணா
================================================ருத்ரா இ பரமசிவன்

அண்ணா எனும் போது
தமிழ் சிலிர்த்து நின்றது.
தமிழ்ப்பகைவர்கள்
பயம் கொண்டனர்.
தமிழன்
உணர்வுப்பிழம்பில்
உருவம் இழந்திருந்திருந்தான்.
தமிழன் என்ற‌
உருவம் தவிர‌
மற்ற வடிவங்களை
இந்த சூழ்ச்சிக்காரர்கள்
வார்த்து வைத்திருந்தனர்.
சாணிப்பிள்ளையாராய் பிடித்து
மூலையில்
சாத்தி வைத்தனர்.
அனுமார் வடைமாலைக்குள்
பொட்டலம் போட்டனர்.
அழுக்கு எண்ணெய்க்குள்
குளிப்பாட்டி குளிப்பாட்டி
சிக்கு பிடித்த‌
விக்கிரகங்கள் போல்
நிறுத்திவைத்தனர்.
கொடுமையிலும் கொடுமை
தனித்தமிழ் முனிவர்கள் கூட‌
சமஸ்கிருத ஸ்லோகங்கள் சுற்றிய‌
பிணங்களாக்கி உலவ விட்டனர்.
தமிழ் ஆண்டு வந்ததென தமிழன்
கோயில் செல்லுவான்
ஒரு ஆண்டின் பெயரேனும் அங்கு
தமிழில் இல்லை.
அண்ணா எனும்
கதிரவன் வந்ததாலே
தமிழன் கொஞ்சம்
அறிவு கொண்டு
நிமிர்ந்து நின்றான்.
ஆங்கிலம் எனும் உலகமொழி
தமிழனுக்குள்
புகுந்ததால் தான்
தமிழ் மொழி தன்மை அறிந்தான்.
தமிழ் மொழி செம்மை அறிந்தான்.
தனித்தமிழ் போர்வை கொண்டு
சமக்கிருத இருட்டுக்குள்
விழவேண்டாம் என்று
உலக மானிட வாசல் திறக்க
ஆங்கிலக்காற்று வேண்டும் என்றான்.
நம் தெய்வீக பாஷை
ஆகாயத்திலிருந்து குதித்து விழுந்த பாஷையோ
நம்மை
ஆயிரம் துண்டு போட்டு
ஆகுதிச் சுள்ளி யாக்கி
வேள்வியில் சாம்பல் ஆக்கி
வெறுமையாய் மாய்ந்து போக‌
சாத்திரம் செய்து வைத்தது.
ஆத்திரம் கொஞ்சமும் இல்லை நமக்கு
நம் அண்ணா நம் வெளிச்சம் காட்டும் வரைக்கும்.
இன்னமும் தமிழன்
சாத்திரம் சடங்கு மாயை
நோய் பிடித்து சாவுகின்றான்.
ஆயிரம் டெங்குகள் நோய்கள்
அழிப்பது போலும் நம்மை
தமிழ்ப்பகைவர் கூட்டம் சேர்த்து
தமிழனை அழிக்கின்றார்கள்.
அண்ணா என்று ஒரு முறை சொல்வோம்.
அலைகள் அலைகள் ஆயிரம் ஆவோம்.



அண்ணா அண்ணா என்றவர்கள்
கோட்டைக்குள்ளே போனபின்னும்
தமிழன் இங்கே இன்னமுமே
ஓட்டை உடைசல் பாத்திரமே
டெல்லிக்கோட்டை நிழல் நீண்டு
இங்கு வரை வந்ததனால்
ஆரியச்சுவடுகள் தமிழ் மீது
ஆட்சி செய்யும் தந்திரங்கள்
கண்டு தமிழன் கொதிக்கின்றான்.
அண்ணா வழி இரு கூறாய்
பிரிந்ததை இங்கே பார்த்திட்டோம்.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே
தந்தது போல் ஒரு ஓங்கு சிலை
படைத்து ஒருவர் தந்திட்ட்டார்.

வள்ளுவன் படத்தை அவர் போட்டதனால்
வள்ளுவன் படத்தையே இவர் இருட்டடித்தார்
வள்ளுவர் கோட்டம் ஒருவர் தந்தார் அதை
குப்பைக்கோட்டம்  இவர் ஆக்கி வைத்தார்.
கொடியில் பொறித்தார் அண்ணாவை
வெறும் கும்பமேளாக்கள் நடத்துதற்கோ?
உலகமே வியக்கும் அண்ணா நூலகம்
புத்தகக் கோட்டம் ஆகவில்லை  அங்கு
புழுதிக்கோட்டை  தான் பார்க்கின்றோம்.
ஆளுயர மாலைகளில் அண்ணா உனை
ஆண்டாண்டு தோறும் மறைக்கின்றார்
மறைத்தாலும் மறையாத ஆதவன் நீ ..உன்
கனவு சிவக்கும் கிழக்கு தனை இந்த
உழக்குகளா வந்து முகம் மறைக்கும்.?
ப ஃ று ளி யாறே  ! அண்ணா  உன்
வெள்ளம் எல்லாம் தமிழ் அலையே!
அண்ணா சாலை யாய் முதுகினிலே
ஆயிரம் ஆயிரம் வாகனங்கள்
தினமும் தினமும் தாங்குகின்றாய்.
நாங்கள் அறிவோம் நன்றாக
எதையும் தாங்கும் இதயம் நீ

==================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக