திங்கள், 27 மே, 2024

நடுகல்

 


கல்லாடன்




புறநானூறுக்கு 

பிழை திருத்தமா

வல்லூறுகள்?

அறத்தமிழ் இங்கே

பஞ்சு மிட்டாய் 

சுற்றும்போது

மறத்தமிழின்

ரத்தம் சொட்டும் 

வாள்களில்

ஈக்கள் மொய்க்கின்றன.

மனித ஈசல்கள்

வீரத்தோடு பலியாகி 

நடுகல் பீலி சூட்டுக்கு

புல்லரித்துக்கொள்கின்றன.

கணினி வழியாய்

மனிதன் மூளைச்செதில்களில்

புதிய அண்டவெளியையே 

ஆக்கினாலும்

அதிலும் கார்ப்பரேட் வெறி

மனித உறுப்புகளை

பேக் செய்து சந்தை

 மண்டலங்களில்

க்ரிப்டோ கரன்சியின்

திராட்சைக் கொடிகளை

நாக்கு நீள நீள நீர் சுரந்து நட்டு

பண்ணையம் செய்கின்றன.

மொழியாவது இனமாவது..

மனிதம் 

கூளக்கடை பஜாரில்

கூறு கட்டி விற்கப்படுகின்றன.

கோவில் கட்டிய

பெருமைக்குள்ளும்

தமிழ் ஒரு முப்புரிநூலில்

தூக்கிலிடப்பட்டு

பலப்பல நூற்றாண்டுகளின்

பிணங்களாய்

மரண விழுதுகளாய்

ஆடிக்கொண்டிருக்கின்றன.

நுண்ணிய தமிழ்க்காதல்

ஒரு "அணிலாடு முன்றில்"

செப்பு விளையாட்டில்

இறும்பூது எய்திக்கிடந்ததை

ஓலை வரிகளே

ஒலித்துக்காட்டிக்

கொண்டிருக்கின்றன.

ஆரியப்படை கடந்தவன்

இன்னும்

ஆரிய வர்ணத்தூரிகையின்

அடிமைத்தளையில் தான்

வெண்கொற்றக்குடை

ஏந்துகின்றான்.

ஆண்ட சாதி எனும்

பிறாண்டல்கள்

தமிழ் முகத்தை 

ரத்தச்சேறு

ஆக்கிக்கொண்டிருக்கின்றன.

ஈரோடு தமிழன்பன் அவர்களே.

உங்கள் வல்லூறுகள்

வானத்தின் சல்லடை

அடையாளங்கள்.

அதன் கண்கள் தோறும்

ஒழுகும் சிவப்பு வெப்பத்தின்

வெள்ளை வெயில்

விதவைக்காகிதமாய்

காத்திருக்கின்றன.

ஒட்டுப்பொட்டாய் இருந்தாலும்

சரி.

முதல் எழுத்தின் சொட்டு விழுந்திடட்டும்.

கிழக்குகள் அதிர்ந்திடட்டும்.

புதிய புல் தலை காட்டும்.


________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக