திங்கள், 27 மே, 2024

கவிப்பேரரசு அவர்களே.

 கவிப்பேரரசு அவர்களே

________________________________

கல்லாடன்.


கவிப்பேரரசு அவர்களே!

மரபுச்செய்யுள் எனும்

மணி மண்டபத்தில்

கவிதைகள் 

சிறைவைக்கப்பட்டிருந்த‌

காலம் ஒன்று உண்டு.

எதுகை மோனை என்பது

வெறும் பூட்டு சாவிகள் இல்லை.

தமிழின் வைரச்சொற்களுக்கு

பட்டை தீட்டுவதும் 

அவையே தான்.

கரு தரித்து உரு தரித்து

வந்த தமிழ்ச்சொல்

தான் வழிந்த தடம் யாவும்

தேனாறுகளாய்

பாய்மம் பெறும்

பான்மையோடு பால் வார்த்த‌

சொல் நிலவுகள் உலவும்

பொன் முற்றங்களே

புதுக்கவிதைகள் ஆயின.

சுட்டெரிக்கும் அறச்சீற்றம் கூட‌

அந்த முற்றங்களில்

முகம் காட்டி

மானுடம் பூசிய‌

புதுத்தமிழ் வானங்கள்

அங்கே குமிழியிட்டன.

புதுக்கவிதைகள்

செய்யுட்களில் 

நுரைக்கோட்டை கட்டிக்கிடந்து

புலப்படாத நூற்றாண்டுகளில்

பனை ஓலைக்கீறல்களில் கூட‌

புதுக்கவிதை 

சிற்பம் செதுக்கியது.

குறுந்தொகையில் 

அப்படி ஒரு சொற்சிதறல்

"கல் பொரு சிறு நுரை"....

காதலின் இன்பம் 

பிரிவின் துன்பத்துள் தான்

சுடர்ந்து சுடர்ந்து 

இன்று வரை 

வெளிச்சம் காட்டிக்கொண்டே

இருக்கிறது.

இந்த சொல்லாடலே 

அந்தப்புலவனுக்கு பெயர் சூட்டியது

"கல் பொரு சிறு நுரையார்" என்று.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே!

உங்கள் ஒரு சொல் 

இன்னொரு சொல்லை காதலிக்கும்.

வைரங்கள் வைரங்களை

கட்டியணைக்கும்

கதகதப்பில் கூட‌

காதலின் "கல் பாக்கங்கள்"

கூடு கட்டிக்கொண்டிருக்கும்

இனிய ஆவேசங்களில் உங்கள்

ஆற்றல்களின் மனப்பீலிகள்

கற்பனை அலை விரிக்கும்.

போகட்டும் 

மிகவும் குறுகிப்பொன‌

இந்த உலகத்தைத்தூக்கி

குப்பையில் போடுங்கள்.

அந்த நோபல் பரிசுகளின்

தூசு துரும்புகளால்

மாசு பட்டுப்போக வேண்டாம்

உங்கள் 

கணியன் பூங்குன்ற 

பனை நுங்கு மென்மைத்

தமிழ் இனிமைப் பாட்டுகள்.



______________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக