வியாழன், 23 மே, 2024

காலம் மாறும்

 காலம் மாறும்

______________________________________‍

கல்லாடன் 



காலம் மாறும் 

சரி.

கடந்து போகும் 

சரி.

உன் சிந்தனையின் 

கோடுகளில் 

ஏதேனும் மாறுமா?

உன்னை அமுக்கிக்கொண்டிருக்கும்

பாரங்கள் புரியுமா?

வண்ண மசாலாக்கள் தடவி

ஒலி ஒளி வக்கிரங்கள் கொண்டு

உன்னை 

விழுங்கிக்கொண்டிருக்கும்

காட்சி ஊடகங்களின்

டைனாசார் கோரைப்பற்கள்

குதறிக்கொண்டிருப்பது

உன் ஓர்மைக்குள் வந்திடுமா?

அதற்குள்

உன் முதுகில் எறியப்பட்டிருக்கும்

கத்திகளாய்

அந்த ஏமாற்றங்கள் சுரண்டல்கள் காயங்கள் 

அவலங்கள் எல்லாம்

உன் வரலாற்றை இன்னும்

ரத்த வெள்ளத்தில் தான்

தோய்த்துக்கொண்டிருக்கும்.

காலம் கனியும்

என்று 

கீறல் விழுந்த கீதங்கள்

உன் செவிகளை 

வருடிக்கொண்டிருப்பது மட்டுமே

உனக்கு

சுகம் பரம சுகம்!


_______________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக