வெள்ளி, 28 அக்டோபர், 2016

விடியட்டும் பார்ப்போம்.









Inline image 1




விடியட்டும் பார்ப்போம்.
====================================ருத்ரா
விடியல் தேடும்
விளிம்பு வானம்
வியர்த்ததோ?
ஓலையின்
விசிறிக்கீற்றால்
விசிறிக்கொண்டதோ?
வெள்ளி உருக்கிய‌
வெளிச்சம் கொண்டு
கொலுசுமணிகள்
கோர்த்துக் கொண்டதோ?
விண்மீன் துடிப்புகள்
விண்டு காட்டியும்
விளங்க வில்லையே.
இருட்டு பூசிய‌
வெளிச்ச முகமா?
வெளிச்சம் கரைந்த‌
இருளின் முகமா?
முகமே இல்லா ஒரு
மூளிச்சிரிப்பு
மூலையில் கேட்குது!
மூண்டு எரியும் தாகம் தன்னை
கிழக்கில் முடக்கிய‌
தடம் தெரிந்த போதும்
ஒரு குரல் கேட்டேன்.
தேடல் எனும் தீப்பொறி தேடி
ஆடல் ஓடல் நாடல் எல்லாம்
ஆயிரம் செய்கிறாய்?
மானிடம் என்ற சொல்லை
ஒரே ஒரு முறை
இதயங்களால் உரசி ஒலித்துப்பார்.
அப்போது
இதயத்துக்கு இதயம்
"இஞ்ச்" தூரம் கூட
இல்லையே மனிதா!
கோடி மைல் தூரம் கொண்டு
கூடுகள் கொண்டாய்.
தீவுகள் கொண்டாய்.
பக்கத்திலேயே லட்சங்களாய்
படுகொலைசெய்யப்பட்ட‌
மனிதப் பிணங்கள் குவிந்த போதும்
உலக மானிடப் பார்வை
அவிந்து போனதேன்?
மொத்த உலகமும் இப்படி
மரித்துப்போகும் முன்
விழித்துக்கொள் மானிடமே!
முதல் மனிதன் தமிழன்
என்று
ஆராய்ந்தவர்கள்
ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!
ஆனாலும்
ஏதோ ஒரு மாயப்பொருளாதார‌
அரசியல் பகை மூட்டம்
இங்கே கனத்த மரணங்களின்
இருட்டுப்போர்வையாய்
அழுத்திக்கொண்டிருக்கிறது.
உலகத்தமிழனே!
உள்ளூர் குடுமிகளின் பஞ்சாங்கத்தில்
நீ "ராகு கேது" கட்டங்களுக்கு
சோழி உருட்டிக்கிடந்தது போதும்.
உலக சாணக்கியம் புரிந்து கொள்.
அந்த சுரண்டல் மிருகங்களின்
ஊளையொலிகளில்
நீயும் சுருதி சேர்ந்து
விஷ்ணுசகஸ்ரநாமம் பாடிக்கொண்டிராதே.
மனிதர்கள் கொண்டு கட்டிய கோபுரம்
கண்ணுக்கு தெரியலையே.
வெறுங்கற்களும்
பொய்ச்சொற்களும் கொண்டு
பிளவு பட்ட உள்ளத்திலா
விடியலை நீ தேடுகின்றாய்?
விடிவது கூட மீண்டும்
இருட்டத்தான்.
பிறப்பது கூட‌
இறப்பதற்குத்தான்.
இருக்கும்
இண்டு இடைவெளிக்குள்
கண்டு தெளிவது
எந்நாளோ?
கேள்விகள் தான்
வெளிச்சம் என்றால்
விடைக்கும் வரை
கேள்..கேள்..கேள்.
கேள்விக்கு கூட இங்கு
கேள்வியே
விடையாகும்.
கடவுளுக்கு மனிதன் இங்கு
கேள்வியா?விடையா?
விடியட்டும் பார்ப்போம்.
========================================ருத்ரா








2 கருத்துகள்:

Unknown சொன்னது…

ji let your poems be short...
we will enjoy more....
now......

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

OK friend.Sometimes I write short poems and I will do more.Thank you.

கருத்துரையிடுக