வெள்ளி, 7 அக்டோபர், 2016

வாழ்க்கை ஒரு தாகம்

வா ழ்க்கை ஒரு தாகம் 



வாழ்க்கை ஒரு தாகம் 
=======================================================
ருத்ரா இ பரமசிவன் 





கவலை... கண்ணீர் 
இவை உனக்கு உன்மீது வந்து 
எப்போது 
கையெழுத்து போட்டன? 
பிறந்த உடனேயே 
அழுது ஒலிபெருக்கியிருப்பாய் 
அது உன் வரவின் அடையாளம். 
கண்ணீரும் கசிந்திருக்கும் 
அது சின்னப்பூவின் பளிங்குத்துளி 
கண்ணீர் அல்ல. 
உன் விடலைப்பருவம் முதல் 
கவலையின் ரேகைகள் உன் மீது 
ஜியாமெட்ரி போடவில்லை. 
அன்று உன் பூச்சிமயிர்களில் 
ஒரு மெல்லிய பிக்காஸோ ஓவியத்தின் 
தூரிகை இழைகள் சுகமாய் வருடின. 
ஆம் 
அப்போது உன் முன்னே 
ஒரு பிஞ்சுப்பெண் நிழல் காட்டினாள். 
காதல் ஒரு பொய் மெய் இன்பமாய் 
அவள் புன்னகைக்கீற்றில் 
புல்லரிக்கிறது. 
அந்த நிழலைப்பிடித்து 
நிஜமாக்கும் வேட்டையில் தான் 
உனக்கு 
வாழ்க்கையின் கசிவு வலிகள் 
வருடிச்செல்கின்றன. 
வயது முறுக்கு அவிழ்ந்த போது 
வாழ்க்கையின் முறுக்கு 
உன்னைப்பற்றிக்கொள்கிறது. 
கவலையும் கண்ணீரும் 
அதன்பாதையை 
வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 
ஒவ்வொரு மைல்கல்லாய் 
கடந்து வரும்போது 
அந்த காக்கையைபோல 
நீயும் 
ஒவ்வொரு கல்லாய் போட்டு 
தாகம் தணித்துக்கொள்கிறாயே! 
உன்னால் இது எப்படி முடிந்தது? 
ஆம் 
வாழ்க்கை ஒரு தாகம். 

====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக