திங்கள், 15 ஜூலை, 2019

பிக்பாஸ்  ஒரு நுரைக்கோபுரம்

பிக்பாஸ்  ஒரு நுரைக்கோபுரம்
====================================================ருத்ரா

சமுதாயப்பிரச்னைகளுக்குள்
தனி மனித பிரச்னைகள்
இடியாப்ப சிக்கல்கள் ஏற்படுத்திக்கொண்டு
இருப்பதை
எழுத்தில் வடித்தாலும் சரி
நடிப்பில் வடித்தாலும் சரி
அது காலத்திற்கேற்ற
இலக்கிய வடிவம் தான்.
ஆனால் அதில் யதார்த்தம் இருப்பதாய்
மாயை ஏற்றி இருப்பதில்
ஏதோ ஒரு மழுங்கடிக்கும் தந்திரம்
மறைந்து இருப்பதே பளிச்சிடுகிறது.
வெளியே சூடு கிளப்ப வேண்டியவை
உள்ளே சினிமாத்தனமாய்
மத்தாப்பு காட்டி
முக்காடு போடப்பட்டு விடுகிறது.
ஓட்டெடுப்பு எல்லாம் நடத்தி
ஜிகினாத்தனமான ஜனநாயகம்
அரங்கேறுவது
நம்மை மேலும் மொண்ணையாக்கி
விடுகிறது.
இதில் வனிதா என்ன?
ஓவியா என்ன?
எல்லாம் நிழல் உடம்புகள்.
இது கண்ணீர் சிந்துவதும்
இதயம் துடிப்பதும்
புதுமையான ரோபோ விளையாட்டுகளே.
தொலைக்காட்சிப்பெட்டிகள்
மர்மக்குகைகளாக இருக்கவேண்டும்..
அதில்
நம் வெறிகளும் ஆசைகளும் கனவுகளும்
மசாலா தடவிக்கொண்டு
நம் தட்டுகளில் பரிமாறப்படவேண்டும்.
இதுவே
மானுடத்தின் உள்ளொளியை
கள்ள ஒளியாக்கி
கள் வெறி யாக்குகிறது.
இந்த நுரைக்கோபுரம் ஏறியா
இதை
எவரெஸ்டுகள் என்கிறீர்கள்?
இது
கள்ளோ? காவியமோ?
டாக்டர் மு.வ அன்று கேட்டார்.
இன்று
எதையும் கேட்பார் யாருமில்லை.
மின்னணு ஒளியிலும்
சாராயம் காய்ச்சிக்குடிக்கலாம்.
நடப்பவை நடக்கட்டும்.
கிடப்பவை கிடக்கட்டும்.

====================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக