வெள்ளி, 12 ஜூலை, 2019

மலை ஏறு .

மலை ஏறு .
=============================================ருத்ரா

மலை ஏறு !
பள்ளத்தாக்குகளில்
புழுக்கள் போல்
நெளிந்தது போதும்.
அந்த வானம்
எனும் டர்க்கி டவல் கொண்டு
வியர்வை துளிர்த்த
உன் முகம் துடைத்துக்கொள்.
பழம் நூற்றாண்டுகளில்
நீ தொலைத்த பாதையில்
உன்னை ரணப்படுத்திய
அந்த முள்ளின் நாட்களைக்கொண்டு
உன்னை நீயே
வேகப்படுத்திக்கொள்.
வண்டி இழுக்கும் மாடுகளைக்
குத்தி குத்தி ரோஷம் கொள்ள வைக்கும்
தார்க்குச்சியைப்போல
அந்த முட்களில் நீ ரத்தம் சிந்தினாலும்
அவை உனக்கு நாளை முகம் காட்டும்
ரோஜா அல்லவா?
இன்று
நீ விஞ்ஞான பூர்வமாய்
ஏமாற்றப்படலாம்.
நீ கும்பிடும் கடவுளின் கைகளைக்கொண்டே
நீ நெறிக்கப்படலாம்.
இவர்கள் சர்வாதிகாரம்
துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் இல்லை.
அந்த உளுத்துப்போன சம்பிரதாயங்களை
இருபத்தொன்றாம் நூற்றாண்டின்
வர்ணம் தீட்டி திணிப்பார்கள்.
சாதி மத கொட்டாங்கச்சிகளிலேயே
நீச்சல் அடிக்க வைப்பார்கள்.
கிருஷ்ணனும் கோபிகைகளும்
அடிக்காத லுட்டிகளா?
அவையெல்லாம் புனிதமாகி விடும்.
காதலர் தினம் என்று
இங்கு இளம் மொட்டுக்கள் கொஞ்சம்
இதழ் திறந்து இதயம் திறந்தால்
குரூரமாக அவை கூழாக்கப்படும்.
அதிலும்
பெரிய சாதியும் சின்ன சாதியும்
காதலை பரிமாறிக்கொண்டால் போச்சு.
அவர்கள் கசாப்பு தான்.
இன்னும் எத்தனை சுதந்திர போராட்டங்களுக்கு
கொடி உயர்த்த வேண்டுமோ?
மலை ஏறு !
சறுக்கலுக்கு இடம் தராதே.
தொலைக்காட்சிகளில் கூட
சனாதனத்தின் பிடிவாதங்கள் தான்
லேசர் ஜோடனைக்குள்
பொதிந்து தரப்படுகின்றன.
அந்த உச்சி வானத்தை பிடித்து விடு.
அப்போது தான்
அச்சமில்லை அச்சமில்லை என்று
நீ பாட முடியும்.
நம் விடியலின் தொப்பூள் கொடியே
நம் தேசக்கொடியை நம்பிக்கையோடு
ஏற்றி வைக்கும்.
"ஜெய்ஹிந்த்".
ஆம் ..இது "ஜெய்ஹிந்த்" மட்டுமே.
வர்ணாசிரம
மற்றும் வேதாந்த விசாரங்களின்
தீட்டுப்பட
ஒரு போதும் வழி ஏற்படுத்தி விடாதே.
ஜனநாயகத்தின் மிருக பலம்
முஷ்டியை எவ்வளவு முறுக்கி
உயர்த்தியபோதும்
நம் ஜனநாயகத்து ஆளுமையின்
ஊழிப்பேரலைகள் உறுமுவது
கேட்கின்றதா?
எச்சரிக்கையோடு முன்னேறு..
மலை ஏறு! மலை ஏறு !

--------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக