ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

வள்ளுவர் பாடிய "கானா"ப்பாட்டு.

வள்ளுவர் பாடிய "கானா"ப்பாட்டு.
==============================================ருத்ரா


ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.....(குறள் 760)


காசு மணி துட்டு ...
இப்படி ஒரு கானாப்பாட்டின் 
பொருள் ஒலிக்கும் படி  
அன்றே "பொருள் "அதிகாரத்தில் 
பாடி இருக்கிறார் வள்ளுவர்.


அறம் பொருள் இன்பத்துக்கு
தூண்டில் போடுங்கள்.
பொருள் மீன் சிக்கினால் போதும்.
மற்றது தானே வரும்.


எண்ணிப்பார்த்து மகிழலாம்
அறம் இன்பம் எல்லாம்.
ஒரு ரூபாய்க்குள் தான் தெரியும்
ஒன்பது உலகங்கள்.

காற்றின் சித்திரங்கள்
அறமும் இன்பமும்.
கரன்சியில் கட்டலாம்
கணக்கற்ற இன்பங்கள்.

சிவனும் விஷ்ணுவுமே
கனக தாராவில் உன்னை
குளிப்பாட்டுவார்கள்
கனமான உன் வங்கிக்கணக்கிற்கு.

"தர்மம்" போடுங்க சாமி என்று
கேட்டவுடன்
அவன் தட்டில் விழுவது
காசுகள் மாத்திரமே.

இல்லாதவனும் திருடுகிறான்.
இருப்பவனும் திருடுகிறான்.
கறுப்புப்பணத்திற்கு வர்ணம் அடித்தால்
அறம் பொருள் இன்பம் வீடு.

பெருமாள் மார்பையே
மணிப்பர்சு  ஆக்கினார்
லெட்சுமியை குடியமர்த்த.

"சொர்க்கவாசல்"பார்க்க‌
கோடி மக்கள் திரண்டனர்.
கோடி ரூபாயில் வைரக்கிரீடம் ஒரு
கோடீஸ்வரர் உபயம்.

ஐம்பொறி இன்பங்களுக்கும்
இன்ப ஊற்று
ரொக்கம் சுரக்கும் 
கைகளில் மட்டுமே.

ஆகா! வண்ண வண்ண சீரியல் லைட்
சரங்களோடும் பவனி வருகிறது
சாமி சப்பரத்துக்கும் சமேதரராய்
"உண்டியல் பெட்டி"

"ஜலம்" தெளித்து "தோஷம்" நீக்கினால்
நோட்டுகள் கிழிந்து அல்லவா போகும்?
அழுக்கோடு உக்கிராண அறை சென்றது.
அத்வைதம் "பொருள்" புரிந்தது.

======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக