நாங்கள்
எந்த தொப்பூள்கொடியின்
நுனியில்
தொங்கிக்கொண்டிருக்கிறோம்.
பாருங்கள் பிரம்ம வாசனையை என்று
சுலோகங்களை சொல்கிறீர்கள்.
ஆனாலும் கூர்மையாய்
ஒரு மனித நாற்றத்து ஓர்மையில்
அந்த கவுச்சியில்
நமது கூர் நகங்களும் கோரைப்பற்களும்
நம் நாகரிகத்து அகரமுதல வை
இன்னும் கிறுக்கி முடிக்கவில்லை.
மனிதனுக்கு மனிதன்
பாய்ச்சும் ஒரு அன்பு வெளிச்சத்தின்
விழுதுகள் இன்னும் இறங்கவில்லை.
அதோ கடவுள்.
இதோ கடவுள்.
என்று எங்களைத்
தேடச்சொல்லிக்கொண்டேயிருக்கிறீர்கள்.
தேடல்களுக்குள் தேடலாக
நாம் எதற்கு வந்தோம் என்ற
ஒரு கேள்வியை நம் மீது
சுற்றி விட்டிருக்கிறீர்கள்.
அந்த நஞ்சுக்கொடியை
அறுத்து எறியாத வரை
கேளிவிகளின் அல்லது அறிவுத்தினவுகளின்
அந்த தொப்புள்கொடி நமக்கு
எந்த "தொடு உணர்வையும்"
இன்னும் தரவே இல்லை என்பதை மட்டும்
தெரிந்து கொண்டு விட்டோம்.
_________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக