ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

ஒருகாய்ச்சல் கவிதை/07.08.25

 


கவிஞர் அவர்களே

அது எப்படி

உங்களுக்கு இந்த‌

கண்ணாமூச்சி விளையாட்டில்

அந்த "இலந்தை வடகத்தை குழியிட்டு"

ஒளிந்திருக்கும்

அந்த "வைரலை"

வலை வீசிப்பிடிக்கத்தோன்றியது.

இப்போது "வைரல்"

எல்லாம் நம் செல்லப்பிள்ளைகள் தான்.

நாலு வரியை தேய்த்து தேய்த்து எழுதி

அதனோடு

பாட்டும் கூத்துமாய்

கேமிராக்குப்பையிலிருந்து

சிலவற்றை தோரணம் கட்டி

தொங்கவிட்டால் 

வைரலோ வைரல் தான்.

இருப்பினும் உங்கள்

"இலந்தை வடகக்குழி"

உங்கள் பிரபஞ்சத்தினவுகளின்

அற்புதமான இலக்கிய‌

ப்ளாக் ஹோல்.

கவிதைக்கு சொற்பஞ்சம் ஏற்பட்டால் 

காய்ச்சல் வருவதுண்டு.

உங்கள் கவிதைகளில்

சொற்பிரளயங்களே அலையடிக்கும்.

உங்களுக்கு

சொல்வெள்ளமே

நோய் ஆகுமா என்ன?

அதெல்லாம் இருக்காது.

கருப்பொருளில் தான் கனமான‌

வியாதி வந்ததாய்

ஒரு அடிமட்டத்துக்கற்பனை.

தமிழ் 

தன் தமிழ் ஒரு தட்டுப்பாடு நோயினால்

தள்ளாடுகிறதோ

என்ற கவலை நோய் 

காய்ச்சலாய் உங்களை

காய்த்திருக்கலாம்.

அப்புறம் என்ன?

நம் தமிழின் உயிர் மூச்சு

சிந்து வெளியிலும் கீழடியிலும்

குரல் வளை நெறிக்கப்படும் போதும்

டிக்கட் முன்பதிவே

நூத்தம்பது கோடி வசூல் என்று

எச்சில் இலைப்பட்டாளங்களாய்

சினிமா வைரல்களில்

சிதிலங்களாய் சிதறிக்கிடக்கும்

நோய் பற்றி என்ன நொந்தல் கொள்வது?

கவிஞனின் காய்ச்சல்

சமுதாயத்தின் காய்ச்சல்.

அதுவும்

"ஈரோடு தமிழன்பனின்"

அந்த பேனாவுக்குள்ளும் ஏற்பட்ட‌

உள் காய்ச்சல்

இப்படியே போனால்

தமிழ் நெஞ்சங்களின்

"சஹாரா"க்கள்

தமிழைச்சருகுகளாய் சிதறடித்து விடுமே

என்பது தான்.

காய்ச்சலின் அந்த தேய்ந்த முனகல்களிலும்

ஒரு பாய்ச்சலுடன்

முழங்குவோம்.

தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!


________________________________________

சொற்கீரன்

(11.8.25 ல் "காய்ச்சலின் கடைசி மூச்சு"

என்ற தலைப்பில் ஈரோடு தமிழன்பன் அவர்கள்

எழுதிய கவிதைப்புயலில்  மூச்சு வாங்கி 

நான் எழுதியது.)

______________________________________________


ஃபீடு பதிவுகள்

அவன்
படைப்புணர்வுக்குள்
பந்திபோட்டுப்
தம்மைப்பரிமாற வந்த
கவிதைகள் காத்திருக்கின்றன
கண்ணீரோடு
அவனக்
கைப்பற்றிப்போக வந்த
கடுங்காய்ச்சல்
கதவை இழுத்துச்சாத்திச்
சாவியைத் தன்இடுப்பில்
செருகி வைத்திருக்கிறது
உணவுத்தட்டு
அருகில் வரும்முன்
கசப்பும் உமட்டலும்
நாக்கை வயிற்றை மிரட்டுகின்றன
இரவுநேரம்
தூக்கத்தைத் தொலைத்துவிட்டுக்
காய்ச்சலிடம்
அவன் கைகால்களையாவது
பிடித்துவிட அனுமதிப்பாயா
என்று கெஞ்சுகிறது
கொதிக்கும் பகல்
தன் மிகைவெப்பத்தைக்
கொட்டிவைக்கும் அலுமினியப்
பாத்திமாக்கிக் கொண்டது
அவன் உடம்பை.
.
இருவாரங்களில்
வெற்றி மனப்பாமையோடு
மருந்தும் மருத்துவமும் நடத்தும்
போராட்டத்தால்
அவன் மூச்சில் இடம்கண்டு நுழைந்து
ஆறுதலும் நம்பிக்கையும்
மெல்லமெல்லப் பரவுகிகின்றன
கண்ணீரைத்
துடைத்துக்கொண்டு
கதவைத் தகர்த்துவிட்டு
இதோ
உள்ளே ஓடிவருகின்றன
அவன் கவிதை!
7-8-25பிற்பகல் 13-36
ஒருகாய்ச்சல் கவிதை




விடுகதைபோட்டுத் தோற்ற காய்ச்சல் வெளியேறியது அவனைவிட்டு பிறகு கமர்க்கட்டுக் கடையில் ஆள்அகப்படுமா அகப்படாதா என்று கையில் ஒற்றையா இரட்டையா போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது அங்கிருந்து நகர்ந்துபோய்ப் பள்ளிக்கூடத்தருகே தள்ளுவண்டியில் இலந்தை வடகத்துள் குழிதோண்டி ஒளிந்து கொண்டிருந்தது விடைபெறும்போது அவனுக்கு நன்றிசொல்லி அவனிடமே நாலைந்துபேர் முகவரி வாங்கியிருக்கலாமே என்று நினைத்தது. அவனா தருவான்? அவன் கவிதையா சம்மதிக்கும்? வலுவிழந்த காய்ச்சல் வேகம் இழந்த புயல் தள்ளாடிக் கரையைக் கடப்பதுபோல் நடந்து தெருவோரக் கையேந்திபவனில் மிச்சம் மீதிக்குக் கெஞ்சியது. பள்ளி விளையாட்டுத்திடலில் கால்பந்தாட்டத்தில் வெற்றிகண்டு தங்கக் கோப்பையோடு வந்துகொண்டிருந்த பையன்களில் காலடியே காய்ச்சலின் கடைசிமூச்சு முடிந்துபோனது 11-8-25 காலை8-40 தலைப்பு-காய்ச்சலின் கடைசிமூச்சு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக