சனி, 25 ஆகஸ்ட், 2018

கலைஞருக்கு ஒரு நினைவேந்தல்.

கலைஞருக்கு ஒரு நினைவேந்தல்.
==============================================ருத்ரா

கலைஞர் என்ற‌
தமிழ்க்கடல் தளும்பிக்கொண்டிருக்கிறது.
சந்தனப்பேழைக்குள்
தமிழ்ச்சரித்திரத்தின்
ஒரு மெகா மெமரி அல்லவா
பில்லியன் பில்லியன்
பூலியன் துடிப்புகளாய்
இந்த இளைய கணினியுகத்துள்ளும்
ஒளி பூத்துக்கொண்டிருக்கிறது!
தமிழ்
தூசி படர்ந்து
ஏதோ ஒரு பேய் பங்களாவுக்குள்
நூலாம்படைக்காடுகளில்
சிக்கிக்கிடந்ததை
சிக்கல் பிரித்து
அந்த அழகிய தமிழ் நூல்களை
ஏட்டுத்துடிப்புகள் மாறாமல்
துடிக்க வைத்து
தமிழ் எனும் செம்மொழியின்
ஒளிப்பிரளயம் உண்டாகச்செய்தவன்
அதோ அந்த பேழைக்குள்!
அது பேழை அல்ல
நம் வருங்காலத் தமிழ் எனும்
அறிவுத்திரட்சியின்
ஒரு சூப்பர் கம்பியூட்டர்!

அந்த பெருங்கலைஞனுக்கு
அஞ்சலி செலுத்த‌
கட்சி வரப்புகள் தாண்டி
இந்திய அரசியல் ஆர்வலர்கள்
எல்லோருமே வருகிறார்கள்
என்பது
ஒரு செய்தி மட்டும் அல்ல.
அது ஒரு பீதியும் கூட.
"கனக விசயர்களின் முடித்தலை நெறித்து
கல்லினை ஏற்றி வைத்த"
அந்த வீர வரிகளை
அந்த தமிழ்க்கனலை
இந்த மெரீனா திடலில்
எங்காவது ஒரு ஒலிப்பெருக்கிக்குழாயில்
ஒலிமழை பெய்துகொண்டிருப்பாரே
அந்த கவியரசு கண்ணதாசன்!
இதன் வீச்சு மழுங்கிப் போனதோ
என்பதே அந்த மெல்லிய அச்சம்.
ஆனால் கடந்து போன
நம் அடிச்சுவடுகள்
காலத்தின் கட்டாயம் எனும்
"படி"ச்சுவடுகளையும் நம்மை
படிக்க
வைத்திருக்கின்றன.
இது கலைஞர் சாணக்கியம் அல்லவா.
என்று
சிலர் மெய்  சிலிர்க்கலாம்.
சிலர் சீறிப்பாயலாம்.
ஆனாலும் நம் சறுக்கல்கள்
அதிலும் புதைந்திருக்கலாம்.
அழைப்புகள்
கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்
என கருதப்படுபவர்களுக்கு
கொடுபடாமல் இருப்பது 
நிச்சயம்
ஒரு கறையாக  பார்க்கப்படும்.
ஒற்றையாய் கொடியேந்தி
நானும் ஒரு திராவிடக்கழகம் தான்
என்று நிற்பவனும்
அந்த திராவிடக்கடல் அலையின் பிஞ்சு தான்
என்று கோட்பாடு
வகுக்க வேண்டிய தருணம் இது.
இன்னும் பங்காளிக்காய்ச்சல்
அது இது என்று சொல்லிக்கொண்டிருந்தால்
அதற்கு தனக்குத்தானே
மன சாட்சி எனும் மருந்தை
ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய
தருணமும் இதுவே!
"எதிரியை விடு துரோகியை அழி"
எனும் உளுத்துப்போன
பொய்  வீரத்தை
என்று தமிழன் கைவிடுகிறானோ
அன்று தான் அவன் முழங்கும்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்பது   உண்மையை "ஒளிர்க்கும்"
இல்லாவிட்டால்
அது தமிழின் உண்மையை ஒளிக்கும்.

அந்த "முள்ளிவாய்க்காலில்"
நம் மொத்த சரித்திரத்தின்
பக்கங்கள் எல்லாம் மொத்தமாய்
மூழ்கி காணாமல் போனது என்பது
உண்மையிலும் உண்மை.
அதன் வலி
"கல் தோன்றி மண் தோன்றா
காலத்தேயும்" முன் தோன்றிய
அந்த "ஃபாஸ்ஸில்" முனை வரைக்கும்
சென்று
நம்மை வதைத்துக்கொண்டு தான்
இருக்கிறது.
அதனால் நமக்கு
இப்போது புதிய கடமை ஒன்று உள்ளது.
இந்தியன் இறையாண்மை என்பது
தமிழன் இறையாண்மையே !
அந்த "சிந்து வெளித்தமிழின்"வெளிச்சமே
இந்தியாவுக்கு மட்டும் அல்ல
உலகத்துக்கே ஒரு கலங்கரை விளக்கம்.
நகுவதற்கு அல்ல இவ்வரிகள்.
நம் அறிவை அகழ்வதற்கே  இவ்வரிகள்.

மாற்றம் ஒன்றே மாறாதது
என்பது தானே
ஒரு சமுதாய வரலாற்றுப்பார்வை.
இந்தக் கூரிய மார்க்சிய நோக்கு
நம் "செந்"தமிழுக்கும் உண்டு.

===================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக