வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

"பீ லி பெய்ச் சாகாடும்..."


"பீ லி பெய்ச் சாகாடும்..."
===========================================ருத்ரா

காதல் பற்றி
வண்டி வண்டியாய்
எழுத்துப்பொதிகள்.
இந்த "பீலி பெய்ச் சாகாடுகள்"
அச்சு முறிந்த கதைகளைத்தான்
கௌரவக்கொலைகளாக‌
உண்மைக்கதையாக‌
அதே முடை நாற்றத்துடன்
அதே ரத்தக்கவுச்சியின்
ஈரத்தில் தோய்த்த எழுத்துக்களுடன்
வெளிபடுத்துகின்றன.

உண்மையில்
காதல் என்பது
சமுதாய இதயத்துடிப்புகளுடன்
சின்க்ரனைஸ் ஆவதே இல்லை.
ஒரு ஆணும் பெண்ணும்
தனிமை மூலை தேடி
பார்க்கின்ற ஆகாயத்தை எல்லாம்
மற்றும்
நிலம் நீர் நெருப்பு காற்றுப்
பூதங்களையும் கூட‌
"இதயவடிவில்"
வெட்டியெடுத்துக்கொண்ட‌
அல்வாத்துண்டுகளுடன்
அடைந்து கொள்கின்றனர்.
சமுதாய அடினிலைப்பிரச்னையான‌
ஏழ்மை அறியாமை பிணி
மற்றும் பேய்த்தனமான மற்ற‌
சுரண்டல் வாதங்கள்
சாதி மதங்களின்
கொடூரமான நரம்போட்டங்கள்
இவற்றையெல்லாம்
களைந்தெறிவது யார்?
அதன் அடிப்படை சித்தாந்தங்கள்
பற்றிய சிந்தனை
சிறிதும் இல்லாமல்
கார்ப்பரேட் காரர்களின்
அச்சு வடிவங்களுக்குள்
அடை காத்துக்கிடக்கின்ற‌னர்.
கை பேசி களின்
"அண்ட்ராய்டு"களின்
அல்ட்ரா வெர்ஷன் களில்
மற்றும் "செல்ஃபி மானியா"
எனும் கடும் நோய் தாக்கி
வீழ்ந்து கிடக்கின்றனர்.

தன் சமுதாய ஆபாசங்களை
தன்  வக்கிரமான அவலங்களை
தானே பார்த்துக்களிக்கும்
ஒரு "சோசியல் நார்சிச"விழ்ச்சிக்கு
வித்திடும்  நாசகார
இந்த சமுதாய பொருளாதார சந்தைக்குள்ளே
சிதிலமான இந்த குப்பைக்காடுகளிலா
உங்கள் காதல் மயில்பீலிகள்
பூங்காக்கள் அமைக்கும்?

==============================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக