வியாழன், 23 ஆகஸ்ட், 2018

"ஓணம்"

"ஓணம்"
==============================================ருத்ரா

ஆண்டு தோறும் மக்கள்
குறைகளை கேட்க வரும்
மன்னன் மாவலி
கதவை தட்ட வரும்போது
இந்த ஆண்டு கலங்கிபோனான்.
கதவுகள் இருந்தால்
வீடுகள் இல்லை.
வீடுகள் இருந்தால்
கதவுகள் இல்லை.
கூரை இல்லை
அடுப்பும் இல்லை
உணவும் இல்லை
"ஓணம்" எனும் திருவோணம்
தலை திருகிய கோழியாய்
கிடந்தது.
ஐயகோ இது என்ன கொடுமை?
எந்த அரக்கன்
இப்படி வானத்தை
கந்தலாக்கி தண்ணீர்ப் பிரளயத்தை
இங்கே அனுப்பியது?
மன்னன் சீறினான்.
மாவலிக்கு செருக்கு இருந்ததாம்.
எல்லோரும் விஷ்ணுவை வழிபட்ட போது
இவன் சிவனை வழிபட்டானாம்.
அதற்காக குள்ளப்பார்ப்பானாய்
தாழங்குடையில் வந்து
மன்னன் பூமியை மக்களை எல்லாம்
தவிடு பொடி ஆக்குவானாம்.
விஷ்ணு சிரித்துக்கொண்டே கர்ஜித்தான்.
என் மக்களை விட்டுவிடு.
என்னை எடுத்துக்கொள்
என்று
தன் தலை பூமிக்குள் அமிழ‌
கொடுத்துவிட்டான்.
அவன் அரக்கனாயிருந்தால்
மக்கள்
இப்படி வட்டம் வட்டமாய்
தங்கள் உயிரை ஆன்மாவை
பூக்கோலமாய் இட்டு
அவனை வரவேற்பார்களா என்ன?
புரட்டி புரட்டி
கதைகள் சொல்லப்படுவதால் தான்
இவை புராணங்கள் ஆகின்றன.
மாவலியின் மனம் பதறுகிறது
மலர்க்கோலம் தெரியவேண்டிய‌
இடங்களில்
மனித சடலங்களா
ரங்கோலி இடுவது?
மன்னன் வெகுண்டான்.
விஷ்ணுவே
என்னை ஏமாற்றிவிட்டாய்
உன் விஷ மழையை
இங்கு தூவி உன் கோரச்சிரிப்பை
இந்த மண்ணின்
ஒவ்வொரு துளியிலும்
விஸ்வரூபம் காட்டுகிறாயே.
இது விஸ்வரூபம் அல்ல.அற்ப ரூபம்.
அரியும் சிவனும் ஒண்ணு இதை
அரியாதவர் வாயில் மண்ணு
என்று
மண்ணின் மக்கள்
உன் பிரமம்மத்தை புரிந்து கொண்டார்களே
நீ ஏன் அற்பத்தனமாய்
இப்படி நீர்த்தாண்டவம் ஆடுகிறாய்?
என் மக்கள் நெஞ்சுரம் கொண்டவர்கள்.
பகுத்தறிவு சுடர் வீசுபவர்கள்.
இந்த வெளிச்சத்தில்
இனி உன் பாஷ்யங்களை
திருத்திக்கொள்.
கேரள மக்களுக்கு
உலகமே ஒன்று திரண்டு
உதவிக்கரம் நீட்டுகிறது.
அசுரர்களும் தேவர்களும்
அவரவர் முகம்மூடிகளை
மாற்றிக்கொண்டார்கள்.
முதன் முறையாக‌
இறைவனைப்பார்த்து
பயப்படாமல் சிரித்தான் மனிதன்.

வெள்ளம் அல்ல சூழ்ந்தது
மானிட நேயப்பூக்கள் அல்லவா
சூழ்ந்தது கேரளத்தை.
பூக்களை வைத்து 
மக்கள் கொண்டாடிய
ஓணம் அல்ல இது.
மனித நேயமே மலர் வனமாகி
கொண்டாடும் ஓணம் இது!
எல்லோரும் கொண்டாடுவோம்
களிப்புடன் "ஓணம்"
எல்லோரும் கொண்டாடுவோம்.

=========================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக