சனி, 24 மார்ச், 2018

ராம ராஜ்ஜியம்

ராம ராஜ்ஜியம்
=====================================ருத்ரா

ராமன் என்றால் அழகானவன்.
ராமன் என்றால் அறிவானவன்.
ராமன் என்றால் ஒழுக்கமுள்ளவன்.
ராமன் என்றால் நல்லவன்.
இன்னும் இன்னும்
"ராமன் எத்தனை ராமனடி?"
என்றெல்லாம்
பக்தியின் இன்னிசை ஒரு தேன்மழையில்
நம்மைக்குளிப்பாட்டும்.
அப்படியென்றால்ராமராஜ்யம்
உலகத்திலேயே சிறந்த ஜனநாயக‌மா?
ஒரு மனிதனாக அவதாரம் எடுத்த கடவுளே
ராமன் என்றால்...
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று தான்
என்று காட்ட வந்தவரே
ராமன் என்றால்...
அவர் ஏன் வில்லும் அம்பும் ஏந்திநிற்கும்
சத்ரியராக வரவேண்டும்?
கீழ் சாதிக்காரன் ஒருவன்
த‌ன் மனைவியை "பழி" சொல்லிவிட்டான்
என்று தன் மனைவியை
தீக்குளிக்கச்சொன்னவனின்
சினத்தீ யாரை நோக்கிச்சுட்டெரித்தது?
அவன் மீட்டுக்கொண்டு  வரும் வரை
அவள் அசோக வனத்தில்
மாற்றான் மன்னனின் சிறையில் இருந்தது
ஊரறிந்த ரகசியம் தானே!
ஒரு கீழ் சாதிக்காரன் அந்த
வினாவை எழுப்பியது தான்
"கடவுளாய்" அவதரித்த அந்த
சாதிமுறை வார்ப்புகளில் உருவாக்கப்பட்ட‌
அந்த சத்ரிய குலத்தானுக்கு
பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
வர்ணாசிரமம் "கடவுள்"களையே
கசாப்பு செய்யத்தயாராய் இருந்தது.
ராமன் எத்தனை ராமனடி என்கிறார்களே
ராமன் ஒரு சேரிச்சிறுவனாயிருந்து
அவனும் எப்படியோ குருகுலத்தில் வந்து
வேத வாக்கியங்களைக்கேட்டிருந்தால்
அவன் காதிலும் ஈயத்தை காய்ச்சி
ஊற்றியிருப்பார்களே!
மனிதனை மனிதன் சுரண்டும்
இந்த கேவலமான சாதிமுறைகள்
புனிதப்படுத்தப்படவா
கடவுள்கள் இங்கே அவதாரம் செய்தனர்?
ராமராஜ்யம் என்று
நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை
காங்கிரஸ்காரரான "காந்திஜி"சொன்னதுதானே
என்று
தந்திரமாய் முழங்குபவர்களே
அந்த காந்தியைத்தின்ற‌
துப்பாக்கிக்குண்டுகள் உங்கள்
"கோட்சே"வினுடையவை தானே.
முன்பு இந்த ரதம் நின்றுவிட்டபிறகு தான்
பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
அப்படி நீங்கள் டில்லி வரைக்கும்
கொண்டு சென்று நிறுத்தினால்
எதுவாவது இடிக்கப்படவேண்டுமே
எங்கள் அச்சம் எல்லாம் இது தான்.
அங்கே தான்
ஜனநாயகத்தின் உறைவிடமான‌
பாராளுமன்றம் இருக்கிறது!

===============================================================




2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

ராமர் கடவுளா ? மனிதரா ?
இந்தக் குழப்பம் எனக்கு என்று தீருமோ.... என்னவோ போங்க...

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

வேதங்கள் மற்றும் வேதாந்தங்கள் பிரம்மம் என்றால் அது இல்லை இது இல்லை எதுவும் இல்லை என்று "பல இல்லைகளைக்கொண்டு " எழுதி சுருட்டி சுவடிகளை மூட்டை கட்டி வைத்து விட்டன.ஆட்சி மூலம் சுரண்டுபவர்கள் தான் அதை வைத்து சனாதனம் என்று "ஆள் அம்பு படைகளின் சட்டத்தின் மூலம் மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


கருத்துரையிடுக