வெள்ளி, 9 மார்ச், 2018

மாறித்தான் போனார்கள்!

மாறித்தான் போனார்கள்!
===========================================ருத்ரா இ.பரமசிவன்

பெண்ணே!
தண்டைகள் குலுங்க‌
கிளிந்தட்டு விளயாடிய போது
நினைத்திருந்தாயா?
கிளிச்சிறகுகளை கத்தரித்து விட்டு
கூண்டுக்குள் வைத்து
கூடி கும்மாளம்
அடித்துக்கொண்டிருப்பார்கள் என்று.
ஆனாலும் கிளியே பார்.
காலம் மாறிவிட்டது.
வயதுக்கு வந்து விட்டாய் என்று
உலக்கைக்கோடுகள் போட்டு
உன் உலகத்தை குறுக்கி வைத்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

குங்கும செப்புக்குள்
ஒரு மாளிகை கட்டி
உன்னை வைத்திருந்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

முரட்டுத் தாய் மாமன்களின்
மீசைக்கு நெய்தடவி
ஆசைக்கு தீனியாகி உன்னை
உறவு என்னும் கொட்டாங்கச்சிக்குள்
மடக்கி வைத்தவர்கள்
மாறித்தான் போனார்கள்.

காதலாவது கத்தரிக்காயாவது என்று
வரதட்சிணையும் கழஞ்சுத்தங்கமும்
கொடுத்து வாங்கிவந்த கணவனுக்கு
கத்தரிக்காய் வதக்குவதும்
கறி சோறு ஆக்கிப்போடுவதுமே
உன் எல்லை என்று இருந்தவர்களும்
மாறித்தான் போனார்கள்.

பொம்பளை சிரிச்சா போச்சு
புகையிலை விரிச்சா போச்சு
என்றவர்களும்
புதை குழிக்குப்போய்
ரொம்ப நாளாய் ஆச்சு.
அவர்களும் மாறித்தான் போனார்கள்.

இப்போது பார்.

மாட்டுச்சங்கிலியை நினவுபடுத்தும்
மாங்கல்யம்
சுவரில் ஆணியில்
தொங்குகிறது.

பந்தல் கெட்டிமேளம் மொய்களோடு
அத்தியாயத்தை முடித்துக்கொள்ள்ளும்
கல்யாணங்கள்
பதிவாளர் அலுவலகத்தில்
கையெழுத்துக்கு வந்தது.

பெண்ணே!
வளையல்களை மட்டும் குலுக்கி
கிளர்ச்சியூட்டும் உன் கையில்
விஸாவும் பாஸ்போர்ட்டும் அல்லவா இருக்கிறது.

உனக்கு எதற்கு இந்த‌
வேதமும் பிரம்மமும்
என்று ரகசியம் காத்தவர்கள்
உன் அறிவுச்சுடரில்
பிரம்மன்கள் எல்லாம்
அணைந்து போய் நின்ற ரகசியத்தை
இவர்கள் புரிந்து கொண்டார்கள்.

உன் அறிவுப்பெட்டகம் திறந்த போது
இந்த அஞ்சறைப்பெட்டிகளோடு
கம்பியூட்டர்களும் அல்லவா
திறந்து கொண்டுவிட்டன.
அதில் உன் சமையல் திறங்கண்டு
அடிமையாகின பலப்பல‌
பன்னாட்டுக்கம்பெனிகள்.

அம்மிக்கல் இருந்தபோது நீ அரைத்தாய்.
மிக்ஸி வந்த போது
இவனும் அரைக்கிறான்.
கிணரும் கல்லும் இருந்தபோது
நீயே எல்லாம் துவைத்தாய்.
வாஷிங் மெஷினில்
இன்று அவனும் துவைக்கிறான்.
அடுக்களையில் அன்று
பாத்திரங்கள் தேய்த்து தேய்த்து
மல்யுத்தம் புரிந்தாய்.
டிஷ் வாஷரில்
அள்ளிப்போடுகிறான் பாத்திரங்களை
இவனும் இன்று.
"டெம்பரேச்சர் ஆவன்"
குமிழ்கள் இருவரும் திருகலாம்.
சமையலும் கூட பொதுவுடைமை.

ஓ! பெண்ணே!
எந்திரமாய் இருந்தாய்.
எந்திரப்புரட்சியில்
எழுச்சி கொண்டாய்.

பெண்ணே!
நீ இவர்களுக்கு எந்திரமாய் இருந்தபோதும்
அறிவுக்கண் விழித்து
அதிர்ச்சி வைத்தியம் அளித்துவிட்டாயே.
இப்போது எந்திரங்களின் எந்திரங்களுக்கெல்லாம்
பொறி நுட்பம் எழுதத்தெரிந்த பிறகு
இந்த உலகம் கூட‌
உன் கால் கொலுசுவின்
ஒரு குண்டுமணிக்குள் தான்
குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பெண்ணே! நீ வாழ்க!

====================================================
07 ஜூன் 2014 ல் எழுதியது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக