செவ்வாய், 12 நவம்பர், 2019

எல்லோரும் போகலாம்

எல்லோரும் போகலாம்.
========================================ருத்ரா

ஆயிரத்து சொச்சம் பக்கங்கள்
அத்தனையிலும் மஞ்சள் தடவி
மங்கள கரமாக எழுதி
ஒரு
மதச் சார்பற்ற ஜனநாயகத்துக்கு
மங்களம் பாடி முடித்து விட்டார்கள்.
கச்சேரி முடிந்து
கதவை இழுத்து சாத்தி விட்டார்கள்.
ஓ!பசுக்களே!
இது பசுக்கள் ராஜ்யம் என்று
நீதி கேட்டு
"ஆராய்ச்சி மணி" அடிக்க வராதீர்கள்.
அதே போல் தேர்க்காலில் இட்டு
நியாயம் வழங்கும் நாடகம்
முடிந்து விட்டது.

ஒரு கடவுள்
இன்னொரு கடவுளுக்கு
சமாதி கட்டும்
உயரிய புனித சடங்கு
மிக  உயர்ந்த ஒரு மேடையில்
நடந்து முடிந்து விட்டது.
தொல்லியல் ஆராய்ச்சி முடிவுப்படியான‌
ஒரு முடிவு இது.
மண்ணின் அடியில்
எலும்புக்கூடு தான் கிடைத்தது.
அதனால்
ஓ மக்களே!
இப்படி நீங்கள்
சதையும் ரத்தமுமாக இருப்பதே
சட்ட விரோதம்.
இனி
உணவு கிடையாது.
காற்று மாசுகளால்
சுவாசிக்க காற்றும் கிடையாது.
இனி நீங்கள் எலும்புக்கூடுகள் தான்.
தீர்ப்பு செயல் படுத்தப்பட்டது.
எல்லோரும் போகலாம்.
ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்.

‍‍‍‍____________________________________________

ஏதோ ஒரு தேசத்தில்
ஏதோ ஒரு வழக்கிற்காக‌
வழங்கப்பட்ட தீர்ப்பு இது
_______________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக