வெள்ளி, 8 நவம்பர், 2019

ராமா

ராமா
====================================================ருத்ரா

ராமா
நீ ஒரு அவதாரம்.
உன்னை வைத்து பிழைப்பு நடத்தும்
கூட்டம்
உன்னை கொச்சை படுத்துவது
உனக்கு புரிகிறதா?
உன்னை மனித உருவில்
அதுவும் ஒரு க்ஷத்திரிய வர்ணத்தில்
பூமியில் பிறக்கவைத்திருக்கிறார்கள்.
நீயே தான்
இங்கு அவதாரம் எடுத்தாயா?
இல்லை இவர்கள்
கற்பனையைக்கரைத்து
இறகுப்பேனாவை அந்த மையில் முக்கி
எழுதினார்களா?
அறுபதினாயிரம் பெண்களில்
கோசலை என்ற பெண் தான்
உன் வாசலை திறந்து வைத்தாள்.
அப்போதே
உனக்கு "தீம்" இது தான்..
அதாவது உனக்கு ஒரு மனைவி மட்டுமே தான்.
அரசர்கள் என்பவர்கள்
அந்தப்புரங்களை
பெண்களால் நிரப்பி
இன்பம் நுகர்ந்து கொண்டிருப்பார்கள்.
ஆனால்
இதில் நீ தப்பி பிறந்து
அவதாராமாக நீ வாழ்ந்து காட்டவேண்டும்.
மேலும்
அரண்மனை உனக்குக்கிடையாது.
காடு தான் உன் வீடு.
அரசனின் மணிமகுடம் உனக்கு
கடைசியில் சூட்டப்படும்.
இடையில் நடைபெறுவது எல்லாம்
நாடக செட்டிங்குகள் தான்.
நீ அவதாரம் எனும் அரிதாரம் களைந்த பிறகு
மிஞ்சி நிற்பது
ஆத்மாக்கள்.
பெரிய்ய்ய்ய்ய ஆத்மா எனும் கடவுளும்
பிஞ்சிலும் பிஞ்சு ஆத்மாவான மனிதனும்
தராசு தட்டுகளில் சமம் ஆகி விடுகிறார்கள்.
ஆத்மாக்கள் இரண்டல்ல ஒன்று
என்று
எல்லாம் கரைந்து உருகிய பின்
இந்த கோவிலுள்
இன்னும் பூதமாகக்கிடந்து
அடம்பிடிக்கிறாயே ராமா!
இது என்ன நியாயம்?
கால ஓட்டத்தில்
க்ஷத்திரியர்கள்
மாறி மாறி வந்து விட்டார்களே.
நீ இருந்த‌
நிழலை இவர்கள்
கையில் பிடிக்க வரிந்து கட்டுகிறார்கள்.
எங்கோ இருக்கும் சூரியன்
வீழ்த்தும் நிழலுக்கு
இங்கே இவர்கள் பட்டா போடுவது
என்ன அறம்?
அவதாரம் முடிந்து திரை போட்டு
நாடகம் முடிந்த பின்னும்
மனிதனுக்கு மனிதன் வதம் நடத்துவது
என்ன வகை அவதாரம்?
அடம் பிடிக்கும் அவதாரமற்ற அவதாரம் அன்றி
வேறு என்ன இது?
ராமா!
நீ உன் கிரீன் ரூமுக்குப் போ.
ஒரு புதிய அவதாரத்தை
முதலிலிருந்தே
எங்கள் "சிலேட்டில்"
நாங்கள் மீண்டும்
ஆனா ஆவன்னா என்று
எழுதிப்படித்துக்கொள்கிறோம்.
மனிதன் என்றால்
அன்பு மட்டுமே.
அம்புகளை வைத்து
புராணம் எழுதியதெல்லாம் போதும்.

========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக