செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

சந்தை

சந்தை
========================================ருத்ரா

சந்தை களம் கட்டியது.
தரகர்கள் துண்டுக்குள்
கைவிரல் நுழைத்து
பேரம் பேசுகிறார்கள்.

இன்னும் மணி அடிக்கவில்லை.
அப்போது தான்
முகங்கள் முகமூடிகளைக்
கழற்றிக்கொண்டு
வெளியே வரும்.

யாரிடம் சரக்கு இருக்கிறது?
யார் வாங்குகிறார்கள்?
யார் விற்கிறார்கள்?
இந்த மூடு மந்திரம் தான்
இந்த தேர்ச்சக்கரத்தை
உருட்டிக்கொண்டு இருக்கிறது.
இது "காகித நதியில்"
நடைபெறும் கும்பமேளா.
கங்கைகளும் யமுனைகளும்
காவிரிகளும்
மனிதர்களின் வாக்கு ஆபாசங்களால்
சாக்கடைகளாக உருமாறின.

திருவிழாவின் நெருக்கடிகளில்
பலூன் விற்பவர்கள்
சவ்வு மிட்டாய் விற்பவர்கள்
பொம்மைகள் விற்பவர்கள்
தள்ளுவண்டிகளில்
ஈக்களோடும் பூச்சிகளோடும்
தின் பண்டங்கள் விற்பவர்கள்.
மிளகாய் பஜ்ஜி இனிப்பு பூரி
இத்யாதி இத்யாதி
விற்பவர்கள்
சில்லரைச்சத்தங்கள் சலசலக்க‌
மொய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
கெடுபிடி செய்யும்
காவலர் வாகனங்கள்
ஜனத்திரளை விலக்கி விலக்கி
வழி ஏற்படுத்துகின்றன,
காந்தியின் புன்னகைக்கட்டுகள்
எங்கே எங்கே
எந்த டிக்கியில் இருக்கிறது?
எந்த புளி மிளகாய்ச்சிப்பங்களில்
பொதிந்து கிடக்கிறது
என்று
மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கின்றன.

மக்களெல்லாம் கூறு  கட்டப்பட்டு
பொட்டலம் பொட்டங்களாக‌
பணத்துக்கு
அடிமாட்டு விலையில்
வியாபாரம் ஆகின்றன.
நஷ்டங்கள் லாபங்களாக‌
பாலிஷ் ஏற்றப்பட்டு
பண்ட மாற்றம் செய்யப்படுகிறது.
சமுதய மொத்தமும் மூச்சுத்திணறி
சிந்திக்கும் தூய காற்று கிடைக்காததால்
முகமூடி போட்டுக்கொண்டு
முட்டி மோதிக்கொண்டிருக்கிறது.
இதற்கு ஆக்சிஜன் சிலிண்டர்
மாட்டுவதென்றால்
எத்தனை ஆகாயத்தை
வெட்டி எடுப்பது?
மணல் அள்ளும் மாஃபியாக்களிடம் தான்
டெண்டர் விடவேண்டும்.
அப்புறம் சூரிய சந்திரர்கள்
வரும் பாதையும் பள்ளமாகி
எங்காவது விழுந்து கிடப்பார்கள்.
குவாரிக்காரர்கள் அவற்றையும்
க்ரஷ் செய்து ரோட்டுக்கு
ஜல்லியாக்கி விடுவார்கள்.

குழப்பத்தின் மேல் குழப்பம்.
வாக்கு போட்டு வாக்கு போட்டு
வாக்கு எண்ணி வாக்கு எண்ணி
...............
....................
இந்த உற்"சவங்களில்"
சவமாக ஆகிக்கொண்டிருப்பது
நம் ஜனநாயகம் மட்டுமே.

============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக