வியாழன், 7 பிப்ரவரி, 2019

எத்தனை அம்புகள்?

எத்தனை அம்புகள்?
=========================================ருத்ரா

எத்தனை திசைகள்?
எத்தனை அம்புகள்?
அன்றாட அவலங்கள்
மனிதனை
மல்லாத்தி படுக்கவைத்து
குற்றுயிரும் குலைவுயிருமாய்
அம்புப்படுக்கையின் பீஷ்மர்
ஆக்கி விட்டது.
பொருளாதாரம்
அவன் குரல்வளையை நெறிக்கிறது.
"கன்ஸ்யூமர் சர்ப்லஸ்"
அதாவது
"நுகர்வோர்களின் உபரி பயன்பாடு"
எனும் பொய் மயக்கத்தை
அவர்களின் கோட்பாடுகள்
காட்டியதெல்லாம்
கானல்நீர் என்று காட்டிவிட்டது.
லாபம் எனும்
குத்தீட்டி கொண்டு
வேட்டையாடும் இந்த‌
விலையேற்றங்களின் விளையாட்டில்
மனித மதிப்புகள்
மயானத்தில்
புகையெழுப்பிக்கொண்டிருக்கிறது.
அப்புறம்
அரசியல் சூதுகள்.
இந்த சூதுகள் எப்போதும்
மனிதனை
கவ்விக்கொண்டே தான் இருக்கின்றன.
அதில்
பழகிப்போய்
மரத்துப்போய்
அவன் விறைத்துப்போய்
அதையே தர்மம் என்றும்
அதுவே வென்று கொண்டிருக்கிறது
என்றும்
காக்டெயில் குத்தாட்டங்களில்
மூழ்கி விடுகிறான்.
அதனல்
அரசியல் நீதியும் கோட்பாடுகளும்
அவிந்தே போய்விட்டன.
சாதி மதங்களும்
"பிணம் தின்னும் சாஸ்திரங்களும்"
மனிதனின்
சமூக விஞ்ஞான தாகத்தை
சமாதிக்குள் அமிழ்த்தி வருகின்றன.
அவன் மொழி இன மாண்புகள்
யாவும்
ஆயிரம் ஆண்டுகளாய்
ஒரு ஆதிக்கத்துள்
ஆவியாய் மறைந்து கொண்டிருப்பதன்
ஓர்மையும்
அவனுள் இல்லாமல்
அடக்கி ஒடுக்கப்பட்டு
காய்ந்த சருகாகிக்கிடக்கிறான்.
இதன் சிகரமாக‌
இவன் வாக்குகள்
பண அம்புகளால் துளைக்கப்பட்டு
ரத்தச்சேற்றில்
இதோ வீழ்ந்து கிடக்கிறான்.
இவன் தான்
தமிழன் எனும் மனிதன்.

====================================================
20.12.2017







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக