திங்கள், 11 பிப்ரவரி, 2019

என்னை யாரென்று...

என்னை யாரென்று...
==================================================ருத்ரா


"என்னை யாரென்று
நீ எண்ணி எனைப்பார்க்கிறாய்?"

ஒரு அதிகாலை வழிபாட்டில்
ஒரு ஆலயத்தில் கைகுவித்து
நின்ற போது
அருகே அந்த‌
சினிமாப்பாடல் ஒலிக்கிறது.
அதன் இனிமையில்
பிரபஞ்சம் கரைந்து ஒழுகுகிறது.
அதன் உட்பொருள் நுழைந்தால்
காதல் கனிவுடன்
தன் இதயத்தை நெகிழ்த்தி
தன் கையில் ஏந்திக்கொண்டு
பாடுகிறது.

ஆண்டவரே
உங்கள் இனிமை எப்படிப்பட்டது?
உங்கள் அன்பின்
தூய்மை எத்தன்மையது?
என்று
வியக்கும் முன்
இந்த இசைக்கடல் என்னை
மூழ்கடித்து விட்டது.

அடி ஆழத்தில்
என் கேள்வி நங்கூரங்கள்
சுக்கு நூறாய் நொறுங்கிப்போயின.
அந்த சினிமாப்பாட்டு
வெறும் சிற்றின்பமா?
உங்கள் பற்றிய பாடல்
பேரின்பமா?
ஓசையின்பத்துள்
எல்லாம் நிரவிய இன்பமே
என்னை எங்கோ
ஆழம் காணாத ஆழத்தில்
அமிழ்த்திவிட்டது.
தர்க்கங்களும் குதர்க்கங்களும்
கடல் நுரையாய் நொறுங்கிப்
போகின்றன.

உங்கள் பாடலே இன்னும்
எங்கள் காதுகளில் விழவில்லை.
நாங்கள் தான்
ஒரு இசைக்கருவியை வைத்து
ஒலியெழுப்பி
எங்கள் ஓசையையும்
அதில் உருக்கி வார்த்து
பாடவேண்டும்.
இதோ இசைக்க தொடங்கி விட்டோம்.
அதே ஓசையின்பம்
அதே ஆழ்கடல்.

இதில் பக்தி என்றால் என்ன?
நம்பிக்கை என்றால் என்ன?
இறைவன் நம்மிடம் என்ன கேட்கிறான்?
தெரியவில்லை.
நம்மிடம் எதை அவன் பார்க்கிறான்?
புரியவில்லை
நாமும் அவனிடம் கேட்கிறோம்.

"என்னை யாரென்று நீ எண்ணி
எனைப்பார்க்கிறாய்?"

================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக