வெள்ளி, 8 மே, 2020

ஒரு பொழிப்புரை

ஒரு பொழிப்புரை:‍‍

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
==================================ருத்ரா
( ஓலைத்துடிப்புகள்..24)


பஃறுளியாறும் பன்மலை அடுக்கமும்
பக்கம் இருந்து மதிமலி புரிசை
வான் தோய் இமையம் இமையாது
விழிக்கும் விழுப்பம் புகழ்சேர் வெற்பன்
அற்பம் செப்பும் முரல் பரல் முகடன்
ஆயினன் கொல்லோ.அணி இழாய்
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
வாலிழைக் கிளர்வால் அறுபடும்
வன்முறை ஊழின் ஆற்றுப்படுமோ?
செம்பின் அம்பொன் குறுமாந்தளிரின்
மின்னல் பெய்தரு ஒளிபூசி யானும்
பசலை நோற்று பாழ்படு கூவல்
கிடந்தேன் மன்னே.யாண்டுகள் நீளுமோ
மலர்தலை உலகம் கவிழுமோ
அவன் தோற்று குணகம் ஓர்நாள்
எல்லே பரப்பும் என் உயிர் தளிர்தரூஉம்.

============================================
பொழிப்புரை
=======================================ருத்ரா

பஃறுளியாறும் அதைச்சார்ந்த பல மலைத்தொடர்களும் அருகருகே இருந்து அணிசெய்ய அவற்றின் சிகரங்களில் நிலவு வந்து தொட்டு நின்று இன்னும் அழகு கூட்ட‌ வான் முட்டி நிற்கும் அந்த இமைய மலை கூட இந்த 
மலை வளம் கண்டு வியந்து இமைக்க மறந்து விழித்து நிற்கும்.அத்தகைய செழிப்பு மிக்க புகழ் வாய்த்தவன் அந்த மலை நாடன்.
தலைவி அந்த தலைவனிடம் மயங்கி விட்டாள். அவனோ அவளுடைய
காதலை  உணர்ந்தானில்லை. வெறும் மலை மேட்டை சொந்தம் கொள்ளும் அற்பன் ஆகி விட்டான்.அழகிய அணிகலன் அணிந்திருக்கும் என் தோழியே! அவன் எப்படி
என்னை மறந்து போனான்? சொல்!
நரந்தை எனும் மணம் மிக்க புல்லை மேயும்
கவரிமான் திடீரென்று தன் ஒளிபொருந்திய 
வால் துடித்து துடித்து அறுபட்டு விழும்படி 
ஒரு பேரிடர்மிக்க நிகழ்வுக்கு உட்பட்டு விட்டால்
அது எப்படி துயர் உறும்? அது போல் நான்
அவன் தொடர்பே அற்று விட்டவள் போல்
ஆகிப்போனேனே! செம்மை செறிந்த
செம்பு போலும் அழகிய பொன் போலும்
நான் நிறம் மாறி பசலையுற்று அந்த சிறிய‌
மாந்தளிர் போல் சுடர் வீசி மின்னல் பாய்ந்ததென‌
தளர்வுற்று பாழ் பட்டுக்கிடக்கும் கிணற்றில் 
வீழ்ந்தவளாய் நொந்து கிடக்கின்றேன்.
இப்படி எத்தனை நீண்ட காலம்  நான் கிடப்பது?
இந்த உலகமே என் மீது கவிழ்ந்து விடுமோ?
தெரிய வில்லையே! திடுமென்று ஒரு நாள் அவன் தோற்றம்
கிழக்கில் ஒளி பரப்பி களிப்பூட்டும் சூரியனாய்!
தோழி அப்போதே என் உயிரும் துளிர்த்து விடும்!

========================================

குறிப்புரை.
===========

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 

ஆய் அண்டிரனை புறநானூற்றுப்பாடல் 132ல் 

வட புல மன்னர்களுக்கும் ஒப்பாக பாடியிருக்கிறார்.

அப்பாடலில்  "நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி"

என்னும் வரி மிகவும் எழில் நுட்பம் செறிந்த தாகும்.



வடதிசை இமயம் மிகவும் உயர்ந்து தென் திசை தாழ்ந்து 

நெடிய இந்நிலம் பிறழ்வது எனும் பேரிடர் நிகழாது 

தடுத்தவன் ஆய் அண்டிரன் என்னும் 

தமிழ் மன்னனே என்கிறார் புலவர்.அப்படியெனில்
 
இவன் கொடையில்  படையில் எல்லாம் 

சிறந்தவனாக வடபுலத்தையே 

நம் மண்ணுக்கு சமப்படுத்தியவன் அல்லவா
 
என்று  வியக்கிறார்.

நில இயல் அடிப்படையில் தென் மண்டலம் கடலில் மூழ்கி 

வடபுலம் உயர்ந்திருக்க வேண்டும்.ஆம் அப்படி ஒரு பிற‌ழ்மம் 

(பிரளயம்) ஏற்படாதவாறு தடுத்தது ஆய் அண்டிரன் என்று 

உயர்வு நாவிற்சியாகப்பாடுகிறார் .

"முன்னுள்ளுவோனைப்  பின்னுள்ளினேனே " என்று 

இவன் புகழை இது வரை யான் அறியாது பாழ்பட்டேன் 

எனும் நெஞ்சம் நைகிறார்.கடல் கோள் ஏற்படுத்தும் 

ஊழிப்பேரலைகள் தலை காட்டி தலை காட்டி 

சென்றிருக்கும் பின்னணியில் அதை உட்குறிப்பாக்கி 

அப்பாடலை எழுதியிருப்பார் என எண்ணுகிறேன்.


நான் அவர் பாடலில் உள்ள
 
"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி"எனும் 

வரியில் உள்ள இனிய காட்சியை தலைவி தலைவன் 

இடையே உள்ள காதலில் பதியம் இட்டு

இச்செய்யுட் கவிதையை எழுதியுள்ளேன்.

தலைவி தலைவனைப்பிரிந்து ஒரு கணம் கூட 

வாழ இயலாத நிலையை விவரிப்பது இப்பாடல்.

நரந்தை எனும் நறுமணம் மிக்க புல்லை மேயும்
 
கவரிமானைப்பற்றி அவர் பாடியிருக்கிறார்.
 
அந்த வரியை அசைபோட்டு அசைபோட்டு 

நான் இந்தப் பாடலை எழுதியுள்ளேன்.

=======================================ருத்ரா







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக