வியாழன், 7 மே, 2020

ருத்ராவின் குறுநானூறு (முதலாம் பத்து...பொழிப்புரை)

ருத்ராவின் குறுநானூறு (முதலாம்பத்து...பொழிப்புரை)

=============================================



குறு நானூறு (1)
===============================ருத்ரா


பனை படு கிழங்கு உரி பிளந்தன்ன‌

கனை கொடு வெய்நோய்

கலிங்கம் எரிக்கும். கழை அடுக்கத்து

மழை உரி உடுத்த மணி அறை வெற்ப!

மஞ்சு துகில் போலும் தழீஇயத் தருதி.

என் ஆவி ஓம்ப விரைதி மன்னே.



=====================================


குறுநானூறு (2)

==================================ருத்ரா


தன் பார்ப்பு தின்னும்

கொடுமுதலை வாய்ப்பட்டன்ன‌

நெடுநாடன் வாய்ச்சொல்

யானே பட்டழிந்தேன்

ஞாழல கரைய அலைகூர

அலையிடை காண் அளியனோ.

____________________________________


குறுநானூறு (3)

=====================================ருத்ரா


கயம் துகள் மூசும் அலர் பெய்

பேழ்வாய்க் கடுவளி சுரம் நுழைபடுத்து

குச்சிக்கை நீட்டி அஞ்சிறு பைம்புள்

அணைக்கத் தாவும் காட்சிகள் மலிய‌

தமியனாய் எல்வளை நோக்கி

வறள் பேயாறு வருந்தி மிசை கடவும்.


==========================================


குறுநானூறு (4)

=====================================ருத்ரா


யாஅ  மரத்தன்ன இலைதொறும்

கதிரொளி பூசி மின்னிய வானம்

மருட்கும் நின் அம்பசலை கண்டுழி

தான்  உள் உள் வெட்கும் குறுகும்.

குடுமி மலையன் செவி போழ்ந்திடு

காலம் காட்டும் முன் விரைந்து.


========================================




பொழிப்புரைகள்
------------------------------------------------------------------------------------



குறு நானூறு (1)

===============================ருத்ரா


(தலைவி பிரிவுத்துயரில் தலைவனை நினைத்து வாடுவதை குறிக்கிறது இப்பாடல்)

பனங்கிழங்கு உண்ணப்படும்போது அதன் தோல் உரிக்கப்படுகிறது. அது போல் நான் காதல் கொள்ளும்போது அந்த வெம்மை உணர்ச்சி என் தோலை உரித்து விடுவது போல் உணர்கிறேன்.என் உடலில் உள்ள ஆடைகூட எரிந்து போய் விடுவது போல் இருக்கிறது.மூங்கில் காடுகள் செறிந்த மழை மேகங்களால் போர்த்தப்பட்ட மணி போல் சுடர் தெறிக்கின்ற மலைவளம் கொண்ட தலைவ! மலையை மேகம் ஆடை போல்  எப்படித்தழுவி இருக்கிறதோ அப்படி என்னைத்தழுவி என் உயிர் பிரியாமல்
என்னை விரைந்து வந்து காப்பாற்று.

குறுநானூறு (2)

==================================ருத்ரா

முதலை தன் குஞ்சுகளை தானே தின்றுவிடும் கொடுங்குணத்தை உடையது.
என் தலைவனும் அப்படித்தான் போலும். அப்படி முதலை வாய்ப்பட்ட அதன் குஞ்சுகளைப்போன்று அவனது  காதல் நிறைந்த சொற்களை அவனே விழுங்கிவிட்டது போல் என்னைப் பிரிவுத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான். அந்த வேதனையில் நான் நைந்து போய் விட்டேன்.
ஞாழல் பூத்த கடற்கரையில் அலைகள் மிகுதியாய் வந்து வந்து அவற்றை
அலைக்கழிப்பது போல் நானும் அல்லல் உறுகின்றேன்.என்னைக்கண்டு
யாவரும் இரக்கம் கொள்கிறார்கள்.

(தலைவியின் பிரிவுத்துயரம் மிக்க கூற்று இது.)


குறுநானூறு (3)

=====================================ருத்ரா


தலவன் பொருள் தேடி பாலை நிலத்து வறண்ட காடுகளிடையே புறபட்டுவிட்டான்.வழியில் உள்ள சுனைகள் எல்லாம் பாழ்பட்டு தூசிபடிந்து கிடக்கின்றன.அத்தூசு அலர் எனும் சிறு பூக்கள் போல அங்கே அடிக்கும் பேய்க்காற்றின் பிளந்த வாய் பட்டு அந்த காட்டுவழியில் படர்கின்றது. தலைவியின் மீது அலர் தூற்றி (பழி பரப்புதல் போல்) அத்தூசுகள் சிறு சிறு மலர்களைப்போல் அந்த காட்டை நிரப்புகிறது.தலைவனோ ஏதும் அறியாதவனாக தன்னந்தனியனாய் அக்காட்டில் நடக்கின்றான்.வழியில் மரங்கள் தம் குச்சிக்கிளைகளை கை போல நீட்டி அழகிய சிறு பசும்பறவைகளை அணைக்கத்துடிக்கின்றன.இந்தக்காட்சிகள் நிறைந்த வழியில் தலவனும் அது போல் ஒளிபொருந்திய வளை அணிந்த தன் தலைவியின் கையைப்பிடிக்கும் நினைப்பில் அந்த அச்சம் நிறைந்த வறண்டு போன காட்டுவழியைக் கடந்து சென்று கொண்டிருக்கிறான்.

(பொருள்வயின் பிரிந்த தலைவன் காட்டுவழியில் தலைவியை எண்ணிக்கலங்கிய நிலை இது)


==========================================



குறுநானூறு (4)

=====================================ருத்ரா


யா மரம் என்றொரு காட்டுமரத்தின் இலைகளில் சூரியனின் சுடர் ஒளி பூசி மின்னுவது சூழ்நிலையில் மின்னல் பரவியதைப்போன்ற ஒரு மருள் நிறைந்த காட்சி தெரிகிறது.தலைவியே  உனக்கு அவனால் ஏற்பட்ட பசலை எனும் அழகிய காதல் நோய் உன்னிடம் படர்ந்து நிற்பது போன்ற நிலையைக் காட்டுகிறது.அதனால் அவன் தனக்குள் உணர்ச்சி பெருக்குற்று நிற்கிறான். இதுவே சமயம்.உச்சி திரண்ட மலைகளின் வளம் மிக்க உன் தலைவனின் செவிகளில் மறைவாகப்போய் உன் காதல் நோய் பற்றிக்கூறு.அது அலர் எனும் பழியாக மாறும் முன் காலம் தாழ்த்தாது இப்போதே சொல்லிவிடு.

(பொருள் வயின் பிரிந்த தலைவன் ஒரு காட்டு மரம் காட்டும் காட்சியில் ஆழ்ந்து தன் தலைவியின் காதல் பற்றி எண்ணி உணர்ச்சிப்பெருக்கு அடையும் போது அவன் செவிகளில் உன் காதலைப்பற்றி ஓதிவிடு என்று
தலைவி தன் நெஞ்சோடு கூறுவது போன்ற காட்சி இது)




மற்றப்பாடல்களின் பொழிப்புரை விரைவில் தொடரும்.





========================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக