சனி, 23 மே, 2020

"இறவொடு வந்து கோதையொடு பெயரும்"

"இறவொடு வந்து கோதையொடு பெயரும்"
==========================================ருத்ரா
(ஓலைத்துடிப்புகள்..30)



தைஇய தைஇய தழையப் புனைந்து 
நீராடு முளிதரும் அலையிடை வாங்கி
நீர்ப்புள் அன்ன நெடுமூச்சு கிடந்து
தொண்டை தழீஇ பசுநீர் பயில‌
தோய்ந்தாய் மன்னே.தொலையக்கடந்தவன்
என்று வரூஉம் என மாமை அவிய 
உன் மணிநலம் அழிந்தாய் அளியள் நீயே.
பொல்லா பொருளா? கனிபடு இருளா?
அலைபடுவான் போல் அலை ஆறு கடாம்
அல்லல் உழப்பவன் மல்லல் ஓயான்.
நின் சில்லைங்கூந்தல் நல்லகம் நாணி
சிலை ஒன்று தொடுத்து இரும்பிழி மழைய‌
நின் நீள்விழி நெய் கனி விராலென 
கவியும் திறக்கும் களித்திறம் காண
அடலேறு கடலது ஆற்றா மூச்சில்
எறிதரும் பூநுரை எக்கர் கரைக்க‌
விரைதரூஉம் நனிஅடர் சுரம் நீங்கி.
வருவதும் போவதுமாய் உன் விழிகொள்ளை
வியங்கு வெள் வேட்டையின் அலைகள் ஆடி
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
திரையன் இவன் நின் உண்கண் மாட்டே.

================================================

தலைவன் தலைவி மேல் உள்ள காதலை மறக்கமுடியாமல்
கடல் அலை போல் (பொருள் தேட) போவதும் வருவதுமாய்
இருக்கிறான்.காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் 
அகநானூறு பாடல் 123 ல் இவன் இப்படி கடல் அலை போல்
அல்லாடுவதை "இறவொடு வந்து கோதையொடு பெயரும்"
என்ற உவமை வரிகளில் நன்கு அழகு பட விவரித்துள்ளார்.
அலைகள் இறால் மீன்களை கொண்டுவந்து போட்டுவிட்டு
மகளிர் நீராடிக்கழித்த மலர்மாலைகளை எடுத்துக்கொண்டு
கடலுள் ஓடுமாம்.இறால் மீனை மலர்மாலையோடு ஒப்புநோக்கி
அந்த உவமை வரியை அமைத்திருப்பதை எண்ணி எண்ணி
அந்தக் கற்பனை இன்பம் கரைகாணா கடலாய் பொங்குவதை
உணர்கின்றேன்.அதில் நான் எழுதிய  சங்கந‌டைச்செய்யுட்
கவிதையே இது

==============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக