செவ்வாய், 12 மே, 2020

"எரிப்பூப் பழனம் நெரித்து..

"எரிப்பூப் பழனம் நெரித்து..

 -------------------------------------------------------------------ருத்ரா
(ஓலைத்துடிப்புகள்..26)


கடமா மிதிபட்டன்ன எரிப்பூப் பழனம் நெரித்து

அரியல் ஆற்றும் வலைஞர் கண்ணே போல்

என் இறை வளை இறுக்கி   திண்ணிதின் திண்ணிய

என் இஞ்சியும் தகர்த்தாய்  நின் மின்னகையால்.

அன்பே ஈண்டு எஃகின் இலை எனின்

அன்பே ஈண்டு வேல் படை வீழ்த்தும்.

முளியலை முன்னீர் திருக்கி ஆண்டு

செருக்கியஉன் வென்றியின்  மாலை யெல்லாம்

மலைகுவிய  மருள்வித்தாலும் நுடங்கு சிலை

அதிர்ந்தாங்கு என் இமைகவி மையுண் விழிகள்

விலங்கினுள் பூட்டிநிற்கும் படுமணி இரட்டும் தேர !

எம் முன்றில் படு புள்ளி நீழல்

கோடு நீட்டி கோடு அழிந்திடுமுன்

விரைகுவாய் சுழிப்பவரும் ஆறுகடவாய்.

_________________________________________________


தும்பி சொகினனார் எனும் "தும்பி சேர் கீரனார்
புறநானூற்றுப்பாடல் 249ல் "எரிப்பூப்பழனம் நெரித்து உடன் வலைஞர்"
என்ற ஒரு மிகச்சிறப்பான அழகு ததும்பும் வரியை எழுதியிருக்கிறார்.
நெல்வயல் நீரில் நெருங்கிப்பூத்திருக்கும் நெருப்பைப்போன்ற‌ சிவப்புப்பூக்களின் அந்த பரப்பை கால்களால் விலக்கி ஒடுக்கி அதில் மீன் பிடிக்க வலையைவீசி அரித்து மீன்களை பிடிப்பார்கள். அந்தக்காட்சியைத்தான் "எரிப்பூப்பழனம் நெரித்து" என்ற வரியில்
தும்பி சேர் கீரனார் ஒரு ஓவியம் போல் தீட்டியிருக்கிறார்.

தலைவனும் அந்த வலைஞன் போல் தலைவியின் கைகளை இறுகப்பற்றி ஒரு கோட்டையைப்போன்ற அவள் உறுதியை கலைக்கும் முறையில் தன் மின்னல் ஒளிரும் சிரிப்பால் அவளை மயக்கி காதல் கொள்கிறான்.
பதிலுக்கு அவளும் அவனிடம் கூறுகிறாள்:
வில் அதிர்வடைந்து அம்பு எய்து தாக்குவது போல் இமைகள் கவிந்த‌
தன் மையுண்ட விழியால் அவன் எத்துணை படைகளை வென்றுகொண்டு வந்து நின்றாலும் விலங்கு பூட்டி சிறைப்பிடிக்கும்.வா.விரைவாய் வளைந்து வளைந்து வரும் பாதைகள் கடந்து என் வீட்டு வாசல் நிழல் கோடுபோல் நீண்டு மறைந்துவிடும் முன் வா.விரைந்து வருக என்கிறாள்.

"எரிப்பூப்பழனம்" என்ற அந்த சொற்கள் தான் இந்த சங்க நடைச்செய்யுளை எழுதும்படி என்னைத்துண்டியது.

-------------------------------------------------------------------ருத்ரா 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக