வெள்ளி, 15 மே, 2020

"வடுஆழ் எக்கர் மணலினும்.."


"வடுஆழ் எக்கர் மணலினும்.."
______________________________________________ருத்ரா
(ஓலைத்துடிப்புகள்..27)

புள்வரூஉம் புள்திரும்பும் நெடியவான்
பல்லூழி படுத்திருக்கும் அம்ம வாழி.
வான் பிறக்கும் வான் இறக்கும் எல்லே
கதிர்பாய்ந்து கொள்ளைப் படூஉம் நாட்கங்குல்
நூறி சிதர்பட்டு நோல் அமிழும் யான் என்னே.
வாள் நுதலி வாளையன்ன எனை இழுத்து
நின் விழிக்கூர் தைய்இ சிறுதுடி துடிசெத்து
மீளாநின்றேன் என உரையிட்டு கடாஅத்த தென்னே.
வெள்ளாம்பல் திரைதடவும் கடல் முழவு
அலமரல் ஒலிப்பீலி ஓவாது கண் துடைத்ததென்னே.
கோட்டுச்சுறா கொப்பளித்த வியன்பரவை
புண்பட்டு புண்மூடி என்நிலை தடம் காட்டி
வடுஆழ் எக்கர் மணலினும் பலவாய்
என்னை வடு உய்த்து வீழ்த்திய வகை என்னே.
வருவாய் ஒரு நாள் வெடி வேய் வெற்ப
வீ சிதற புள் சிதற புல் அருவி நுரை சிதற‌
என் இறைநெகிழ் வளையும் ஆண்டு நனி சிதறவே.

____________________________________________________________

இது மதுரை மருதன் இளநாகனார்  பாடிய புறநானூற்றுப்பாடலில் (55)
வரும் இறுதி அடியின் "வடுஆழ் எக்கர் மணலினும்.."என்ற வரியின்
அந்த கடற்கரை அழகின் கவின் மிக்க காட்சியில் மனம் பறிகொடுத்து
நான் எழுதிய சங்கநடைக்கவிதை.தலைவியின் துன்பம் இங்கு பாடப்பட்டிருக்கிறது.
பிரிவித்துயரத்தின் நடுவிலும் தலைவன்  மடக்கப்பட்ட மூங்கில் மரம்
திடீரென்று விடுபட்டு ("வெடி வேய்")அருகே உள்ள பூ புள் அருவியின் நுரை
இவற்றைஎல்லாம் சிதறடித்துக்கொண்டு வருவது போல் என் முன் கையில் அணிந்த வளையைக்கூட சிதறடித்துக்கொண்டு வருவான் என நம்பிக்கை கொள்கிறாள்.
"வெடி வேய்" எனும் அந்த ஒப்பற்ற கிளர்வு மிக்க சொல் "வெறி பாடிய‌
காமக்கண்ணியார்"எனும் புலவர் புறநானூற்றுப்பாடல் 302 ல் முதல் அடியெடுத்துப் பாடிய‌  சொல் ஆகும்.
_________________________________________________________________ருத்ரா







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக