வெள்ளி, 25 அக்டோபர், 2019

அசுரன்

அசுரன்
============================================ருத்ரா


பத்து அவதாரங்களும் பத்தவில்லை
இந்த பதர்களுக்கு.
மானுட ஒளியை கொன்று புதைக்கவா
சங்கும் சக்கரமும்
இன்னும் கதாயுதமும் கோடரிகளும்.?

இந்த சினிமா
மனித வேடம் ஏந்திய
அசுரன்களை அழிக்கவந்த‌
மகா அசுரன்.

தீபாவளி என்று
ஆண்டு தோறும்
பட்டாசுகளை
தன் மீது கொளுத்திக்கொண்டு
கரிக்குப்பையாய் போகிற‌
இந்த அடிமைப்பூச்சிகளின்
மீசை மயிர்களில்
ஒரு சிறு கீற்று
கோடி மின்னலை ஒளிரவைத்ததே
இந்த சினிமா.

பூமணி அவர்களின்
நாவல் தூவிய எழுத்துக்களில்
எரிமலைகள்
கருவுற்றுக்கிடந்தன என்பது
உருவுற்று எழுந்ததே
இந்த சினிமா.

சமூக ஆர்வலர்
திரு. எவிடென்ஸ் கதிர் அவர்கள்
இப்படத்தைப்பற்றி
குறிப்பிடும்போது
தனுஷ் வைத்திருக்கும்
அந்த கருப்புப்பொட்டு தான்
கதையின் அக்மார்க் முத்திரை
போன்றதாக சொன்னார்.
ஆம்
அடிமை சரித்திரத்தின் அந்த‌
அமாவாசைப்புள்ளியை
ஆயிரம் பவுர்ணமிகளின்
வெளிச்சப்பிழம்பு ஆக்கியது
இந்த சினிமா.

ஆண்ட பரம்பரை
 என்ற கொக்கரிப்புகளுடன்
எக்காளம் ஊதுபவர்கள் எல்லாம்
அடி நாதமாய் இருக்கின்ற
கீழ்ச் சாதி மக்களை
ஏன் இன்னும் கீழேயே வைத்து
அடக்குகின்றார்கள்?

ஆரிய அரக்கம் தந்த‌
சனாதன‌
மிருகங்கள் விழுங்கி
எச்சமிடபட்டவை தானே
அந்த சரித்திரங்கள்.
அதன் அவலங்களிலிருந்து
வந்த சீற்றம் தான்
இந்த சினிமா.

வர்ணாசிரமம் என்பதையும் விடவா
இந்த
புற்று நோய்க்கிருமிகளும்
எய்ட்ஸ் கிருமிகளும்
ஆபத்தானவை?

உண்மை சுடும் என்ற
உண்மையையும் இப்படித்தான்
காட்ட வேண்டிய கட்டாயம்
என்பது தான்
இந்த சினிமா.

கச்சா பிலிம் சுருளில்
இது வரை
ஆதிக்க வர்ணங்களே தான்
"ஈஸ்டமன் கலர்".
ஆனால்
ஒரு விடியல் வண்ணம்
இப்போது தான்
கொப்பளித்திருக்கிறது என்று
காட்ட வந்தது தான்
இந்த சினிமா.

உயர் சாதியின்
எச்சிலும் மலமும்
ஏந்திக்கொள்ள
ஒரு அடிமை வர்க்கத்தை
"சூத்திரா ..பஞ்சமா "
என்று
சமஸ்கிருதத்தில் சொல்லி
புளகாங்கிதம் கொள்ளும்
வெள்ளை வெறித்தனத்தை
வதம் செய்ய வந்ததே
இந்த அசுரன்.

பாரத நிலத்தின் மண்ணில்
எல்லாம்
வியர்வை பெய்து
உயிர்கள் நட்டு
உழைப்பின் விசையில்
பட்டா போட்டது இந்த
பாட்டாளி இனமே.
அவர்களுக்கா "பஞ்சமி"என்று
நீங்கள் பிச்சை எறிவது?
வரலாற்று அக்கிரமம் இது.
திருத்த வந்ததே
இந்த அசுரன்.

அப்படி
வீசியெறிந்ததையும்
பொறுக்கிக்கொண்ட து
சுரண்டல் என்னும்
"பொறுக்கித்தனம்".
அந்த புரட்டுகளை
நொறுக்க வந்ததே
இந்த அசுரன்.

அன்று
கீழ்வெண்மணியில்
பற்றியெரிந்து சாம்பல் ஆனது
மக்கள் ஜனநாயகத்தின் கர்ப்பப்பை.
அந்த நான்குவர்ண பஞ்சவர்ணத்தீயில்
மத்தாப்பு கொளுத்திய
மிருகத்தனங்களை
சொக்கப்பனை கொளுத்த வந்த
ஊழித்தீ
இந்த அசுரன்.

இது வரை
விருதாவாய்
கொடுக்கப்பட்ட
விருதுகள் எல்லாம்
இருக்கட்டும்.

ஆனால்
இந்த "அசுரனுக்கு"
ஆயிரம் "பாரத ரத்னா" விருதுகள்
அளித்தாலும் போதாது.

========================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக