வியாழன், 10 அக்டோபர், 2019

தனுஷ்

தனுஷ்
===================================================ருத்ரா

நடிப்பு என்றால்
கொழுத்த உடல் காட்டி
கொந்தளிப்பை நெளிய விடுவதா?
இல்லை.இல்லை.
கரப்பான் பூச்சிபோல்
ஒல்லி உடம்பும் கூர் மீசையும்
வைத்துக்கொண்டும் கூட‌
சிலிர்க்க வைத்து
புலி உறுமல்களை
விழி வழியே காட்டி
தியேட்டரையே கிடு கிடுக்கவைப்பதும் கூட‌
அற்புதமான நடிப்பு தான்.
தனுஷ் படங்கள்
அத்தகைய நடிப்பின்
"சேட்டலைட் சித்திரங்களை"
அடுக்கி வைப்பட்ட ஆல்பம் எனலாம்.
ஆனால்
அசுரன் என்பது
நில உரிமையின்
நெருப்பு வேட்கையின்
ஒரு தமிழின்"வெக்கை" ஆகும்!
பூப்போல
எழுத்தையே எரிமலை ஆக்கிய
பூமணியின் பேனாவுக்குள்ள்ளிருந்து
கன்னிக்குடம் உடைத்தது
வெறும் மை அல்ல.
சமுதாய நீதியின் தாகமெடுத்த‌
லாவா அது.
பஞ்சமி நிலம் என்ற‌
சொல்லில்
சினை கொண்டிருப்பது
ஆயிரம் குருட்சேத்திரப்போர்கள்.
"எல என்னத்தல பேசிகிட்டுருக்கே
பொடதியிலே ரெண்டு குடுத்தாத்தாம்ல‌
நீயெல்லாம் அடங்குவெ"..
தாமிரபரணியின் பளிங்குநீருக்குள்ளும்
படுத்திருக்கும்
அந்த ஆதிக்கச்சுரண்டலின்
குரல்கள் நமக்கு
நன்றாய்க்கேட்கின்றன.

============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக