செவ்வாய், 18 செப்டம்பர், 2018

வீணையடி நீ எனக்கு...

வீணையடி நீ எனக்கு...
================================================ருத்ரா

பெண்சுதந்திரம் வேண்டுமென்று
மீசை முறுக்காத குறையாய்
பெண்களே விழிப்பு உணர்வு பெற்று
இணைய தளத்தின்
சந்து பொந்துகளில் எல்லாம்
குரல் எழுப்புகிறார்கள்.
இதற்காக‌
மலைபோல குவிந்த‌
குறும்படங்களும்
நெடும்படங்களும்
அங்கங்கே விருதுகள் பெற்று
உலக கவனம்
திருப்பு முனை அடைந்து
வீறு பெற்று எழுகிறது.
தன் வாழ்க்கையின்
முழு நீள படத்தையெல்லாம்
எந்த சம்பவங்களும் இன்றி
வெறும் கச்சா பிலிம் ஆக்கி
வெள்ளை வெளேர் என்ற‌
நரைப்பூக்களின் வனத்தில்
வந்து நின்றபோதும்
அந்த பெண்மை எனும் சக்திக்கு
எழுச்சி ஏற்படுத்திய‌
எத்தனையோ பெண் திலகங்கள்
ஆணாதிக்கத்தின் அச்சில் சுழலுகின்ற
இந்த பூமியின் தலையெழுத்தை
மாற்றியே தீருவோம்
என்ற வேள்வியில் தாமே
ஆகுதியாய் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது அந்த பெண்ணியம்
முன்னேற்றத்தின் பாதையில்
முனைந்து வந்து கொண்டிருக்கிறது.
கணினி யுகம் கூட‌ அவர்களின்
கைவிரல்களுக்கு
புகுந்து கொண்டுவிட்டது.
இந்த கார்ப்பரேட்டுகள்
பெண்மை என்றால்
வண்ண வண்ணமான நகப்பூச்சுகளின்
குவியல் என்றும்
சருமத்தை பொன் திட்டு ஆக்கும்
சாதனங்களின் கடல் என்றும்
கருப்பாய் மின்னும்
அவர்கள் கூந்தல் இழையைக்கொண்டு
இந்த பிரபஞ்சத்தின்
இருட்டையெல்லாம் ஒளிபூசி
சுடரச்செய்யலாம் என்றும்
ப்ளாப் அப் விளம்பரங்கள்
ஆயிரம் குவிக்கிறார்கள்.

"பெண்ணே
உனக்கு மதம் இல்லை.
அது உனக்கு பாதுகாப்பும் இல்லை.
சமுதாய மானிட நேயமே
நீ உன் சிந்தனைக்குள்
உன்னை ஓவியமாக்கும் மெகந்தி"
என்று
எந்த கம்பெனியாவது
விளம்பரம் செய்கிறதா?

அவை
பெண்மையின் மீது
அழுந்திகிடக்கும் நுகத்தடிகளுக்கு
ஆயிரம் "ஜுவெல்லரி" டிசைன்களை
அடுக்கி அடுக்கி காட்டுகின்றன.

இன்னும் "அண்ட்ராய்டுகளில்"அவை
பெண்ணே
உன்னை அந்த செல்ஃபோன்கள் வழியே
காதல் எனும்
"காக்காய் முள்" காட்டில் தள்ளி
குயில்பாட்டு பாடுகின்றன.

காதல் உனக்கு
ஒரு சமுதாய ஆயுதம் தான்
அந்த காதலன் உன்
"தோழனாகவும்" இருக்கும்போது.
இருவரும் சேர்ந்து
அந்த வானவில்லை
உங்களோடு கோர்த்துக்கொள்ளுங்கள்.
பட்டாம்பூச்சிகளை
வர்ணப்பிரளயங்களாய்
உங்கள் இமைகள் மீது
வழிந்தோடச்செய்யுங்கள்.
ஆனாலும்
சமுதாய முரண்பாடுகளில்
சாதி மதப்பேய்களால் உருவாக்கப்படும்
யதார்த்தமும்
உங்கள் காதோர கூந்தற்சுருளில்
மௌனமான சுநாமிகளாய்
மிரட்டுவதை ஓர்மை கொள்ளுங்கள்.
சமுதாயச்சீற்றம் எனும்
ஒரு மெல்லிய லாவா உங்கள்
காலடியில் ஒரு
செம்பஞ்சு ஓடையாய் நெளிவதையும்
உணர்வில் வையுங்கள்.

பெண்கள் தான்
மாற்றங்களின் மிகப்பெரிய நம்பிக்கை.
உங்களுடைய அந்த‌
மரணவலி என்னும் பிரசவவலி
கண்ணுக்குத்தெரியாத‌
அல்லது
உணர்ச்சி நரம்புகளில் படராத‌
ஒரு ஊமைவலியாய்
இந்த சமுதாயத்தை
பிசைந்து பிசைந்து
கொடுமைப்படுத்திக்கொண்டிருக்கிறது.
பெண்ணே!
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
என்று
புல்லாங்குழல் வழியே
புளகாங்கிதம் கொள்ளும் வேளையில்
இந்த வலிபற்றிய "வலியை"
அந்த நந்தகுமாரனுக்கும் புரியவை.
புராணங்களில் வரும் பக்திலீலையில்
குளிக்கும்போது
உங்கள் துகில்களை எல்லாம் களவாடி
ஒரு "பக்தி தத்துவத்தை"உங்களுக்கு
புரியவைக்க முயலும்
இந்த நந்தகுமாரன்களை எல்லாம்
உன் வீட்டு அடுப்பெரிக்கும்
விறகுகள் ஆக்கி விடு.
ஆம்.
இந்த சிலிண்டர் யுகத்திலும்
இந்த விறகு கட்டைகளே உனக்கு
வீணை வாசிக்க காத்திருக்கின்றன.

===================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக