சனி, 31 டிசம்பர், 2022

ஹேப்பி நியூ இயர்

 ஹேப்பி நியூ இயர்

_________________________________________________

ருத்ரா





ரெண்டு முள்ளும் ஒண்ணா சேந்தப்புறம்

அந்த ஊசிமுனையில் நின்று கொண்டு

2023ன்

அல்ஜிப்ராவை அலசலாம் என்ற

நினைப்பில் 

கண்ணயர்ந்து விட்டேன்.

ஒன்றரை மணிகழித்து தான் 

முழித்தேன்.

அதற்குள் அந்த ரயில்வண்டி 

எங்கு ஓடிப்போயிருக்கும்?

அவ்வளவு தான்.

காலக்குப்பியை பிதுக்கி எடுத்த நிகழ்வுகளை

இனியும் அதில் 

அடைத்து பிதுக்க முடியுமா? என்ன?

காலமாவது..குப்பியாவது?

காலமும் வெளியும்

பூஜ்யமாய் இருக்கும்

அப்பாலுக்கே அப்பால்

பில்லியன் அப்பாலும் கடந்து

தன்கண்களைக்கொண்டு

துருவிக்கொண்டு நிற்கிறதாமே

ஜேமஸ் வெப் தொலைனோக்கி.

அப்புறம் 

என்னடா வெங்காயம்?

உங்கள் சாதிகளும் சாத்திரங்களும்

கடவுளின் கதைக்குப்பைகளும்.

உன் பயம் என்று தீர்ந்ததோ

அதுவே புது ஆண்டு.

அல்ல அல்ல‌

காலமே காலமாகிவிட்ட‌

உன் உள்ளத்தின்

ஒளிபிழம்பு அது.

எல்லா இருளையும் குடித்துத்

தீர்த்துவிட்ட‌

அறிவின் பிழம்பு அது.

உன் கடிகாரம் உன் உள் துடிப்புக்குள் தான்.

இந்த பிரபஞ்சத்தைக்கொண்டு

உன் முகம் ஒற்றிக்கொள்.

புத்தம் புதிதாய்

ஒரு புன்னகையைத் துளியிடு!


_________________________________________________________

(இந்த வலைப்பூ உட்கார்ந்திருக்கும் காலக்கோட்டில் ஹேப்பி நியூ இயர் இன்னும் இமை விரிக்கவில்லை.நான் மதுரையில் அதிகாலை (01.01.2023) 1.25க்கு இக்கவிதையை எழுதினேன்.........ருத்ரா)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக