சனி, 24 டிசம்பர், 2022

பெரியார்

 பெரியார்

______________________________________

ருத்ரா



நினைவு கொள்வது

என்றால்

மறந்து போனதின் 

மறு பக்கம் தானே.

நினைவாவது

தினமாவாது

வெங்காயம்.

"அதை சிந்தி..

அதை யோசின்னு..

சொன்னேனே

அது என்னாச்சு?"

அவர் சொடுக்கிய சவுக்குநுனி

உள்ளே போய் 

குத்துகிறது

குத்துகிறது

குத்திக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் 

மக்கள் தொகையை

இந்த கும்பாபிஷேகங்களும்

தீபாவளி நெரிசல்களும் தான்

காட்டிக்கொண்டே இருக்கின்றன

வெறும் அம்மணமாய்.

ஆனால்

இவர்கள் மந்தைகள் அல்ல.

மாக்களும் அல்ல.

இந்த 130 கோடி மக்களையும் 

உருட்டி திரட்டி

ஒரே உயர் மனிதனாய்

நம் அரசியல் அமைப்பு செய்து தந்தது.

குடியரசு தலைவர் என்று.

அவரோ 

ஒரு மதத்தலைவர் காலடியில்.

கோவிலில் கடவுள் அருகில் 

செல்லாமல் மறிக்கப்பட்டு

எங்கோ 

ஒரு படிக்கட்டில்.

மனிதனுக்கு மனிதன்

மகத்தானவனே.

மனிதனை மதிக்காத மனிதன்

மிருகமாக கூட இருக்க‌

தகுதியில்லை.

செத்துப்போகட்டுமே இந்த‌

சாதியும் மதமும் என்று

இவன் நினைக்கும் வரை

தினமும் இவன்

செத்துக்கொண்டு செத்துக்கொண்டு தான்

இருப்பான். 

தன்மானம் இல்லாத ஜனநாயமே

கடைந்தெடுத்த சர்வாதிகாரம்.

இதைத்தான் சொன்னார் அவர்:

சிந்தி..

யோசி..என்று.

தீக்குச்சியை கிழிக்கிறோம்

ஒவ்வொரு தடவையும் நாம்

சிகரெட் பற்ற வைத்துக்கொள்ள மட்டுமே.


______________________________________________________






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக