திங்கள், 21 நவம்பர், 2022

ஒடக்காய்

 


பதரே பதரே..

__________________________________________


ஒரு திரைப்படக்காட்சி.

நான் கோவையில் இருக்கும் போது

பெரியநாயக்கன் பாளையம் எனும்

ஒரு அரை நகரத்தில்

ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது

ஊருக்குள் வாக்கிங் செல்வது உண்டு.

அப்போது நாலைந்து சிறுவர்கள்

கையில் சிறிய நீண்ட கம்பு வைத்துக்கொண்டு

அங்கேயும் இங்கேயும் 

அலைந்து கொண்டிருப்பார்கள்.

அண்ணா...ஒடக்காய் அடிக்க‌

ஓடுகிறோம் என்பார்கள்.

அந்த திரைப்படம் இக்காட்சியை

அப்படியே அச்சடித்து காட்டியது.

அந்த ஒடக்காயை விடாதீங்கடா

என்பான் ஒருவன்.

அதற்குள் அதன் வாலை சிறு கயிற்றில்

கட்டி அதை ஓட விட்டு

மேய்த்துக்கொண்டிருப்பான் 

இன்னொருவன்.

இவர்களின் "வாலி வதைப்"படலத்தில் 

கண்ணைப்பிதுக்கி

குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கும்

அந்த ஒடக்காய் என்ற ஓணான்.

டே அடிக்காதீங்கடா..பாவண்டா

உட்டுருங்கடா என்பார்

கமலஹாசன் என்ற சப்பாணி.

போங்கண்ணா உங்களுக்கு தெரியாது.

அது ராமருக்கு ஒண்ணுக்கு அடிச்சிக் குடுத்துது.

ராமாயணத்தில் இப்படி ஒரு

இன்னா நாற்றக் காண்டம் இருப்பது

இப்போது தான் தெரிகிறது.

"சரிடா..விட்டுடுங்கடா..அதை.

இனி அது ஒண்ணுக்கே அடிக்காது"

இப்படி அவர் சொல்லும்போது

அவர்காட்டும் 

நகைச்சுவை

அப்பாவித்தனம்

அச்சம் 

அனுதாபம் எல்லாம் கலந்த

அற்புத நடிப்பை நம்மால்

மறக்கவே முடியாது.

அதற்கே தனியாக 

ஒரு "ஆஸ்கார்"கொடுக்கலாம்.

அந்த இடத்தில் 

உலகளாவிய இலக்கிய உலகில்

ஒரு தலைசிறந்த எழுத்தாளரை

நிறுத்தி வைத்துப்பாருங்கள்.

அவர் தான் நம் பதிப்புக்கும் பெருமைக்கும்

உரிய திரு பெருமாள் முருகன் அவர்கள்.

அந்த ஒடக்காய் தான் 

அவர் எழுதிய‌

"மாதொரு பாகன்" எனும்

ஒப்பற்ற நாவல்.

அந்த விடலைச்சிறுவர்கள் தான்

"ஆண்ட பரம்பரைடா"

எனும் கூச்சல்காரர்கள்.

ஒரு உயிர்த்துடிப்பான நாவல் என்பது

ஆயிரம் ஆயிரம் பக்கங்களில்

பெய்யும் "மையின்"அடர்மழை அல்ல.

கல்லெறிகளிலும்

ரத்த விளாறுகளிலும்

மரண காயங்களிலும்

உயிர்ப்பலிகளிலும்

உருவாவதே அந்த‌

உயிர்த்துடிப்பான எழுத்துக்கள்.

அந்த ஆசிரியர் எழுதியதே

ஆனந்த விகடன் தீபாவளி இதழில்

வெளி வந்த‌

"பதரே பதரே"

இதுவும் ஒரு "பாதர் பாஞ்சாலி"குவாலிடி

சிறுகதை தான்.

மனம் எனும் கலைடோஸ்கோப்பை

வண்ண வண்ணமாய் 

திருப்பி திருப்பிக்காட்டும்

அற்புதக்கதை.

அந்த எழுத்துக்களின் தீயில்

குளித்து எழ முடியாது.

எரிந்து தான் குளிக்க முடியும்.

அதையும் தான் பார்த்துவிடுவோமே


(தொடரும்)

_______________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக