வியாழன், 10 நவம்பர், 2022

தொலைந்து போயிற்று.

தொலைந்து போயிற்று.

_______________________________________

ருத்ரா



வாய்க்கால் வரப்போரம்

கலித்தொகையாய் ஒரு

"செய்யுள்"

செங்குருதி குருத்து விட்டு

கதிர் விரிக்கும் 

உயிர்ப்பின் பொன் சிரிப்பு

விடியல் இங்கு!

கழனிச்சேற்றில்

கெண்டைக்கால் பதிய‌

நாற்றுமுடியை 

நறுக் நறுக் என்று

வயலில் நட்டுக்கொண்டே

கண்டாங்கிச் சேலையோடு

கதை நூறு பேசுகின்றாய்

உன் பசும்புன்னகையை

சேற்றோடு சமைத்து 

பெருஞ்சோறு ஆக்குகின்றாய்.

மக்களின் பசியே அங்கு 

வாய் பிளந்து வாய் பிளந்து

கேட்டதாய் நினைத்து 

உழைப்பின் உன் மின்னல் துளிகளை

அல்லவா 

அங்கு இட்டுக்கொண்டு செல்கிறாய்!

காற்று தானே கேட்கட்டும் என்று

"க்ளுக்" சிரிப்பை தூவி விட்டாயே

முத்துப்பல் வரிசையிலே.

பெண்ணே!

இந்த தீபாவளிகளின் 

மொத்த மத்தாப்பு வெளிச்சமும் 

எங்கோ தொலைந்து போயிற்று

உன் சிரிப்பின் முன்!

________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக