புதன், 10 மே, 2017

"நீட்" தேர்வு

"நீட்" தேர்வு
==========================================ருத்ரா பரமசிவன்

"நில்லு"

"சார் கடைசி பெல்  அடிச்சிருவாங்க"

"அடிக்கட்டும் அதென்ன தலையில் சடைகள் .யாரப்பா அங்கே
இவன் தலைமுடியை வழிச்சுடு..."

"அது சரி கழுத்தில் என்ன புது மாதிரி "டை"? இதை கழற்றி எறிங்க ."

எறியப்பட்டது

திடீரென்று பாம்பு பாம்பு என்ற அலறல் .ஒரே திமு ..திமு ..தள்ளு முள்ளு

சோதனை அதிகாரி இதற்கு கொஞ்சமும் அலட்டிக்கொண்டவராக
தெரியவில்லை.

"சரிப்பா! நாங்க சட்டையை சோதிப்போம்னு சட்டையே போடாம வந்திருக்கியா?...அதென்ன இடுப்புல வரி வரியா ...தோலுல  "பெர்முடா"வா?
அத கழற்று..."

"சார் வேண்டாம்...விட்டுடுங்க! "

"அதெப்படி...?  யாரப்பா .இங்க வந்து இத கழட்டி விடுங்க"

"வேண்டாம்... வேண்டாம்..."

"பெரிய சிதம்பர ரகசியமா ...சரிதாண்டா .."

விறைப்பான சல்யூட்டுடன் ஒரு காவற்படை க்காரர் அந்த பையன்  "கதற கதற " துகில் உரித்தார்.

அங்கே ஒரு திகில் காட்சி...எல்லோரும் வியப்பில் உறைந்து போய்விட்டார்கள்.

அவன் இடுப்புக்கு கீழே ஒன்றுமே இல்லை. ஆம்  நாத்திகத்தனமாய் ஒன்றுமே இல்லை ..ஒன்றுமே இல்லாத நிர்வாணம்.

அதற்குள் ஆயிரம் புலிகள் உறுமிக்கொண்டு அங்கே வர ,,,
அண்ட சராசரங்கள் அதிர...எல்லாமே தலைகீழாய்....


"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து...."

பாட்டு ஒலி வெள்ளமானது.

"அவன் தலையிலிந்து "கங்கைப் பிரவாகம்"...

எங்கிருந்தோ முரட்டுக்காளை அங்கே வந்து சேர்ந்தது.

எங்கும் புகை மண்டலம் !

ஜெய ஜெய சம்போ சிவ சம்போ...

முழக்கமிட்டபடி கைகள் உயர்த்தி  கூப்பியபடி ...

மோடிஜி ...அவருக்கு பின் ராஜநாத்  சிங்க்ஜி ...அவருக்குப்பின்  மோகன் பாகவத்ஜி ...அப்புறம் ...

வெங்கய்யநாயுடுஜியின்கொடுக்கைபிடித்துக்கொண்டு அந்த சர்மாஜி இந்த ஜோஷிஜி அப்புறம் எல்லா ஜிஜிஜிஜிஜிக்களும் அந்தப் பையனை வலம்  வரத்தொடங்கினர்..
.
அந்தப்பையன் விஸ்வரூபம் எடுத்து விட்டான்
.
"அடி முடி " தெரியவில்லை...

தொப்புள் தான் தெரிந்தது ஒரு புள்ளியாய்.

சோதனை அதிகாரி அப்புறமும் விடவில்லை..அந்தப்புள்ளி ஏதோ
ஒரு "ட்ரோன் "ஆக  இருக்கலாம் ..என்று ஓடி  ஓடிப்போய்  தொப்பென்று விழுந்தார்.

அதற்குள் நாரதர் கூவிக்கொண்டே வந்தார்..

"பரமேஸ்வரா"  உங்கள் பையன் உங்களுக்கு "ஓங்காரம்"பற்றி சொல்லிக்கொடுக்க வந்த போது மிடுக்காய் நானே படித்துக்கொள்வேன்
என்று அந்த தண்டையார்  பேட்டை முட்டுசந்து "மாநகராட்சி "பள்ளியில்
ப்ளஸ் டூ  படித்து தேர்வு அடைந்து இந்த "நீட் தேர்வு" எழுத வந்துவிட்டீ ர்களே ..
இது தகுமா? இது பொறுக்குமா?"

நாரதர் புலம்பிக்கொண்டே  இருந்தார்!

சிவ கர்ஜனை தொடர்ந்தது...

"என்னையும் (சிவனை) எதோ திராவிடன் என்று தானே இவர்கள் அலட்சியம் செய்தார்கள்.....இந்து மதத்திற்காக ஆள வந்திருக்கும் இந்த "பினாமித்துவ"
வாதிகள் யார்? உலகமே இந்த தென்னாட்டிலிருந்து தான் தொடங்குகிறது.
இந்த தென்னாடுடைய சிவன் ஒலித்த தமிழ் இருக்கையில் வேறு கூச்சல்கள்
இங்கு எதற்கு...?"

உடுக்கை ஒலிகள் பூகம்பங்கள் போல் அதிர்வைத் தந்தன..

"பொறுத்துக்கொள்ளுங்கள் ஈஸ்வரா! உங்கள் "லாவா"வை  உமிழ்ந்து தீயின் ஊழிதாண்டவம் ஆடி விடாதீர்கள் .அந்த வெப்பம் தாங்க முடியாது..."

நாரதர் அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தார்.

..................................................

....................................................


"ஆமாம் ஆமாம் வெயில்  தாங்கால...வேண்டாம் ..வேண்டாம்.....சீக்கிரம் ..சீக்கிரம்  பரீட்சசைக்கு கிளம்ப வேண்டும்."

அந்த வீட்டுக்கூடத்தில் திடுக்கென்று அந்த பகல் தூக்கத்திலிருந்து அந்த சோதனை அதிகாரி விடுபட்டு மலங்க மலங்க விழித்தார்.

கையில் எதோ ஒரு தினச்செய்தி  "வேலூரில் "41 டிகிரி C "என்று கொட்டை எழுத்தில் காட்டியது.

""நாளைக்குத்தானே  அந்த பரீட்சைக்கு "சோதனை அதிகாரி"யாக போக வேணடும்..இப்போதே ஏன் இப்படி இந்த கனவின் உளறல்கள்..."

சோதனை அதிகாரியின் மனைவியார்  அவரை உலுக்கி எழுப்பினார்.


==========================================================================
(இது ஒரு கற்பனைசித்திரம் )




   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக