புதன், 21 டிசம்பர், 2016

மோடி பிடித்த புலிவால்

மோடி பிடித்த புலிவால்
======================================ருத்ரா.

நாயர் பிடித்த புலிவால்
என்ற ஒரு மலையாள மணம் வீசும்
சொலவடை
எல்லோரும் அறிந்திருப்பார்கள்!
கருப்புப்பண வேட்டையில்
மோடி அவர்கள்
கைக்குள் அகப்பட்டது
புலி வாலா?
எலி வாலா?
இவர் கையின் பிடியை விட்டால்
என்ன நடக்கும்?
பிடித்துக்கொண்டே இருந்தால்
என்ன நடக்கும்?
என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
கோடானு கோடி மக்கள்
தெருவில் வரிசையில்
நின்று கொண்டே இருக்கிறார்கள்!
அந்தப் புலியும்
புலியின் வாலும்
ஏதோ எப்போதோ
அமெரிக்கா போய்
மோடிஜி
"டாய்ஸ்ரஸ்ஸில் "
வாங்கி வந்த "ஸ்டஃப்டு "பொம்மை தானோ
என்று சந்தேகமாய் இருக்கிறது.
நீ வாலைப்பிடித்து
இழுப்பது போல் இழு
நான் உறுமுவது போல் உறுமுகிறேன்
என்பது போல் தான் தெரிகிறது.
ஒற்றை ரெண்டாயிரம் ரூபாய் தாளுக்கு
பாரத நாடே
கசங்கிப்போய் கிடக்கிறது.
கதி கலங்கிய அவலங்களில்  நைந்து கிடக்கிறது.
ஆனால் அவை
கட்டு கட்டாய் கோடிக்கணக்கில்
சில தனியார்களிடம்
திருப்பதி லட்டுகள் போல்
பிரசாதமாய் குவிந்து கிடக்கிறது.
விசாரணை அது இது என்று
அமர்க்களத்துக்கு குறைச்சல் இல்லை.
வேண்டுதல் வேண்டாமை இல்லா
நடு நிலைமைக்குப் பதில்
நடுங்க வைத்து தனக்கு
ஓட்டுக்களின் மகசூல் குவிக்கும்
தந்திரமும் அதில் இருக்குமோ
என்ற ஐயமும் அங்கே
நிழலாடுகிறது!
எப்படியிருப்பினும்
மக்கள் குரலே மகேசன் குரல்
எனும் ஜனநாயகம் குப்பை கூளமாய்
நாறிக்கிடக்கிறது!
கியூவில் மக்கள் எச்சில் இலைகளைப்போல்
இறைந்து கிடக்கிறார்கள்.
ஏற்கனவே
கார்ப்பரேட் பொருளாதாரம்
மக்களை
அட்டையாய் உறிஞ்சிக்கொண்டிருப்பது
போதாதென்று
டிஜிட்டலில் ஒரு "அட்டை"பொருளாதாரத்தை
பதியம் போட முயலுவதின்
உட்குறிப்பு என்ன?
மோடி அவர்களே!
"கருப்புப்பணத்தை"வேட்டையாடும்
உங்கள் திட்டம்
மகத்தானது!
புனிதமானது!
மனதார அதை வரவேற்கிறோம்.!
ஆனால்
அந்த முரட்டுக்காளையிடம்
வழக்கமான உங்கள் "ஜல்லிக்கட்டு"தந்திரத்தின்
பாவ்லாக்களால்
மக்களின் அன்றாட வாழ்க்கைப்பாடுகளின்
மூச்சுக்காற்று முடங்கிப்போய் விடும்
அபாயம் அல்லவா
இங்கே தொற்று நோயாய் பரவிக்கிடக்கிறது.
புலி வால்  பொம்மலாட்டம் போதும்.
அந்த ஆட்கொல்லி புலிகளை
கூண்டில் அடையுங்கள்.
இந்த தேர்தல் கால சர்க்கஸ் விளையாட்டுக்கு
வாயில்லா இந்த "ஓட்டு"ப்பிராணிகளா
தீனி ஆவது?

=========================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக