திங்கள், 26 டிசம்பர், 2016

கல்லாடக்கிளவன்




கல்லாடக்கிளவன்.....................ருத்ரா இ.பரமசிவன்
============================================
(6 நவம்பர் 2013 ல் எழுதியது)



கல்லாடக் கிளவன் நறவுசொல் மாந்தி
கண்புதை ஆர்துயில் ஐம்பால் ஓரி
நுதல் மறைபு மூழ்க வள்ளியின் ஒசியும்.
இலவம் பாசடைச்செங்கண் கானம்
செம்பூப் பரவை வானம் மறைக்கும்
தீப்பந்தர் வேய்தரு நெடுவழி இறந்த‌
போக்கிடை நினையுமென் வாலெயிறு
நித்திலம் வித்திய தண்பழனத்தன்ன.
அறைவீழ் நிணத்திடை நாறும் ஆறு
புலிபடுத்த திண்டு நிழல்வீழ்த்த குண்டு
கவைமுள் கடுஞ்சினை பூத்த கண்ணும்
மின் உமிழ்பு சீர்த்த என்விழி யுள்ளி
குழைந்த சொல்லும் இறைதடவி யாங்கு.
பாணாட் கங்குல் பால் சொரிந்தன்ன‌
பரல் விரித்து மைஅடர் அடவிநீர் ஒலிப்ப‌
மாயுறு செய்யும் என்னும் என்னும்.
அடுதீஞ் சோற்றின் மண்டை பெய்தென‌
கொழுஊன் சுவைக்கும் பாணன் ஒக்கும்
மடைஉடை சொல்திறம் யாத்த தென்னோ
என்னுடல் மேவிய மாமைக் கவின்
தொகுத்து உரைக்கும் பலவாய் உகுக்கும்
கேட்குவை தோழி அவன் அளைசொல் ஆங்கே.

===============================ருத்ரா

செய்யுட்சுருக்கம்


சங்க காலத்திலும் கல்லாடன் என்றொரு புலவர் இருந்தார்.அவர் செய்யுளிலிருந்து கல்லாடம் கற்றுத்தேர்ந்து கிளவிகளை (சொற்களை)தலைவியின் உள்ளம் கிளர்ச்சியடையும் வண்ணம் உரையாடும் திறன் கொண்டவன் தலவன்.அவன் இன் சொற்களில் மூழ்கிய தலைவியின் மெய்ப்பாடும் உணர்ச்சி நிறைந்த காதலுமே இச்செய்யுள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக