பெரு வியப்புக்கவிதை !
_____________________________________
ஈரோடு தமிழன்பன் அவர்களே!
கவிதைகள்
சொற்களிலிருந்து
தன்னையே
சாறு பிழிந்து கொண்டு
எங்கோ ஆவியாகிப்போயும்
மீண்டும் மீண்டும்
கவிதைகள் ஆகும்
வியப்பே
உங்கள் சொல்லோவியம்.
வரலாற்றுப்படுகைகள்
இந்த பூந்தமிழை
அடித்துத் துவைத்து
கந்தல் ஆக்கி கசக்கிப்பிழியும்
நெருக்கடியின்
காலகட்டங்களிலும்
கல்வெட்டு போல ஒரு
மின்வெட்டு நெளியும்
ஒளி ஊழிகளா
உங்கள் கவிதைகள்?
உங்கள் பேனாச்சொட்டுகளில்
எத்தனை எத்தனை
யுகங்கள் சோம்பல் முறித்துக்கொண்டு
வானவில் விழிகளில்
வண்ணங்கள் தூவியிருக்கின்றன?
தமிழ்க்கடலில்
பாய்மரம் விரிக்கும்
உங்கள் சொற்துடுப்புகள்
கலங்கரை விளக்குகளாகவும்
விந்தை புரியும்
விந்தை கூட
விளக்க இயலா பெரும் வியப்பு!
__________________________________________
சொற்கீரன்
(15.06.25 ல் ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய
"சொற்களின் துயரம்" எனும் கவிதையைக்
கண்ட பெரு வியப்புக்கவிதை இது)
________________________________________________
இன்பம்
என்னும் சொல்
சாராயக் கோப்பைகளிலிருந்தும்
சதிகாரர்கள் கூட்டத்திலிருந்தும்
அகராதிக்குத் திரும்பிவிட்டது
கட்டிப்பிடித்து அழும் மக்களுக்கு
அதனால் ஒரு நாள்கூட
ஆறுதல் சொல்ல முடியவில்லை
பூக்களில் இருந்து
புறப்பட்டுப் போன
அழகு என்னும் சொல்
விடியல் முகத்தை வேட்டு வைத்துத்
தகர்க்கும்
குரூரங்கள் முகத்தைப் பார்க்கமுடியாமலும்
பொய்வளர்க்கும் புன்னகையின்
ஒப்பனைக்கு மனம் சற்றும்
ஒப்பாமலும
பூக்களுக்கே திரும்பிப் போய்விட்டது.
தராசுத் தட்டிலிருந்து
கடைத் தெருவுக்குள் போன
நியாயம் என்னும் சொல்
திரும்பிவந்து
எடைக் கற்களை வீதிநெடுக
வீசிஎறிந்துவிட்டுத்
தாங்கமுடியாத் துயரத்தோடு
தராசுத்
தட்டில் படுத்துப் புரண்டது
வள்ளுவக் குடியிருப்பிலிருந்து
வெளியே புறப்பட்ட
வாழ்வு என்னும் சொல்
கோளாறுகள் கைகளில் அகப்பட்டுத்
தப்பித்துத் தம்
குடியிருப்புக்கே திரும்பி ஓடியது
ஆனால்
அதற்குள் கல்லறை நாட்டு மொழி
வள்ளுவக் குடியிருப்புத்
தன்னுடையதே என்று
போலி உரிமைப் பத்திரம்
எழுதிப் பதிவுசெய்ய ஏற்பாடு செய்தது
இன்னும் நிற்கவில்லை
"வாழ்வின்" மெய்நடுக்கம்.
15-6-2025 மாலை 5-18
தலைப்பு- சொற்களின் துயரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக