புதன், 4 ஜூன், 2025

இயற்கைச்சூழல்களுக்கு ஒரு உலக தினம்.

 


இயற்கைச்சூழல்களுக்கு ஒரு உலக தினம்.

_____________________________________________


ஓ!மனிதா!

உன்னை சந்திக்கும் இயற்கை

இன்று

இமை விரிய நோக்குகிறது.

உன் மூளைக்குள்

அடுக்கு ரோஜாக்களாக‌

ஆயிரம் மூளைகள்

வாசல் திறந்து கொண்டு விட்டன.

செயற்கை மூளை மண்டலங்கள்

அடர்த்தியான் மேக மண்டலங்களாய்

வழி மறித்து அச்சம் கவிக்கின்றன.

வர்த்தம் எனும் மூளை மண்டலம் 

வீங்கிப்போன மனிதன்

இயற்கைக்கு துளி கூட‌

சேதாரம் இல்லாமல்

எங்கோ இருக்கும்

எக்ஸோ பிளானட்டில் இருந்து கூட‌

தங்கத்தை

உருக்கி ஆவியாக்கி

இங்கே அப்படியே

க்ரிப்டோ கரன்சியில்

தேக்கி வைத்தால்

இனி எல்லா பிரபஞ்சங்களும்

அவன் காலடியில் தான்

என்று கனவுக் குமிழிகளை

சேர்த்து வைத்துக்கொண்டிருக்கிறான்.

அறுநூறு கோடிகளுக்கும் 

மேல் குவிந்து போன‌

மனிதக்குவியல்களே

அவன் சந்தைச்சுரங்கம்.

இயற்கையின் செழுமையும் வளமையும்

எல்லா மக்களுக்கும் தானே

என்ற

அந்த "ஒளிப்பொறி" மட்டும்

எங்கே போனது?

இன்னும் அந்த‌

இருட்டுகளின் குருட்டுச்சந்துகளில்

போர்களின்

கருப்பு நிழல்களைக்கொண்டு

அல்லவா

திகில் மூட்டிக்கொண்டிருக்கிறான்.

இவன் ஏவுகணைகளும் ட்ரோன்களும்

கூரிய கொடூர நகங்களால்

அந்த சூரிய விடியலைக்கூட‌

பிறாண்டி பிறாண்டி

ரத்தம் வழியச்செய்யும் வெறிகளில்

சிறகு படபடத்து

சில்லறைகளை சிதற விட்டாற்போல்

கல்லறைகளை குவிக்கவும் 

தயங்க வில்லையே!

இயற்கைச்சூழல்கள் 

உலக தினம் கொண்டாட‌

தோரணம் கட்டி வருகின்றன‌

ஆறுகளையும் மலைகளையும்

மணல் பரப்புகளையும்

அகல விரித்துக்கொண்டு.

ஆனால்

அதையும் குவாரிகளாய் ஆக்கி

கேக் வெட்டி தின்று தீர்த்துவிடப்

பார்க்கின்ற‌

சுயலாபப்பெருச்சாளிகள்

சூழ்ந்து கொண்டு

ஆதிக்க கொடியேந்தி வருகின்றனவே!

உலக தினம் கொண்டாட 

இனி ஒன்று தான் மிஞ்சும்.

அது

உலக கல்லறை தினம்.

அந்த அவநம்பிக்கைக்கும் அவலங்களுக்கும்

ஒரு கல்லறை கட்டுவதே

இந்த உலக தினம் நமக்கு காட்டும்

ஒரு எச்சரிக்கை என‌

எடுத்துக்கொள்வோமாக!

உலக மானிடமே!

விழித்தெழு!

துடித்தெழு!

துயரங்கள் 

தொலைந்து போகட்டும்.


_____________________________________________

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக