விழித்திருப்போமாக!
_____________________________________
பனிப்போர் முடிந்து
முப்பது ஆண்டுகளுக்கு
இரண்டு பட்டுக்கிடந்த
உலகம்
இப்போது பல துண்டுகள்.
வணிக நுட்பம்
மானுட நீதியை தராசில்
நிறுத்துப்பார்த்த போது தான்
நமது பழைய பூதமான
ஷைலக் தனம்
பூதாகரமாய் கூரிய நகங்களோடு
முகம் காட்டுவது தெரிகிறது!
லாபம்...மூலதனக்குவிப்பு
எல்லாம்
வண்ணமயமான கனவுக் குமிழிகளை
வானம் முட்ட முட்ட
பறக்க விட்டுக்கொண்டிருக்கின்றன.
இப்போது மீண்டும்
முரண்பாடுகள்
இயற்கை நீதியாகி
கோவில்களாகி
மதங்களாகி
சாதிகளாகி
நிறவெறிகளாகி
போக்கு காட்டிக்கொண்டிருக்கின்றன.
மனித அறிவின் கூர்மை
எந்த எல்லையையும்
தட்டி நொறுக்கிக்கொண்டு
எழுந்து கொண்டிருக்கிறது.
வணிகத்தின்.. கொள்ளை லாபத்தின்...
கவுச்சியின் நெடியும்
சேர்ந்து கொண்டுதான்
கொடி உயர்த்துகிறது.
மனிதம்
மலர்ச்சியுற
எழுச்சியுற
செழிப்புற
அந்த பொல்லாத
பசி..பிணி அவலங்கள்
நீங்கிப்போக
புதிய யுகத்தின்
இன்னும் புதியவையான
மைல் கற்கள்
நடப்படுமா
நம் பயணத்துக்கு?
இந்த "எளிய சமன்பாடு"
தீர்க்கப்பட
அந்த
செயற்கை மூளை
நம் இயற்கை மூளையின்
நுண்முனை முடிச்சுகளில்
ஏதாவது ஒரு மின்காந்த சிந்தனையின்
அதிர்வெண்களை
பதியம் இடுமா?
பார்ப்போம்...நம்புவோமாக!
நம்பிக்கையை
கோவில் படிக்கட்டுகளில்
வைத்துக்கொண்டு
"தூங்கும் வியாதி"
நம்மை தாக்கி விடாமல்
விழித்திருப்போமாக!
_____________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக