செவ்வாய், 17 ஜூன், 2025

சீறுக‌!

 



"தமிழ் எழுதி" எனும் எனது இந்த‌ மின் தமிழ்ப்பலகையில் எழுதிக்கொண்டிருப்பது யார்? என் விரல்கள் வேண்டுமானல் நாற்றுகளாய் இங்கு நடவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் அந்த தட்டல்களில் மின்னல்களின் ஊற்று எப்படி வந்தது? தமிழன்பன் எனும் தடையற்ற‌ சொல் மின்சாரம் அங்கு பாய்ச்சல் கண்டது. காணமுடியாத தமிழ்த்தாய் கண்டு கொண்டிருக்கிற‌ தன் குழந்தைகளைக் கண்டு அங்கு திடுக்கிட்டு உறைந்து போய் இருக்கிறாள். என் குழந்தைகளே! என் ஒலி உங்கள் ஒளி. என் கன்னிக்குடம் உடைந்த பேரூழி உங்கள் உயிர்ப்பெருக்கு. மொழி என்று சொல் உதிர்த்து உங்களையும் உதிர்த்துக்கொள்ளவா பிறப்பித்தேன் உங்களை? இருட்டுக்கண்டத்தின் சந்து பொந்துகளுக்குள் அடைந்து கிடக்கவா உங்களுக்கு உரு கொடுத்தேன். ஆதிக்க எச்சில் பட்டு அவிந்து போவதற்கா உங்களை படைத்துத் தந்தேன். ஒரு அகத்தியனின் சனாதனக்கமண்டலத்திலா கவிழ்ந்து கிடக்கிறீர்கள்? நெருப்பின் கரு அல்லவா நான் தந்தது. துடிப்பின் பெரு வெடிப்பு அல்லவா என் மூச்சுகள். குழந்தைகளே எங்கே என் சுவடுகள்? எங்கே என் தடங்கள்? உங்கள் தாயின் மணிக்குரல் இது. பேரறிவின் பெரும்பொங்கல் அல்லவா நான் இட்டது. சோற்றுப்பருக்கைகளிலா உன் வரலாற்றுப்பரல்கள் புதையுண்டு போயின? சீறுக‌! என் மக்களே! உங்கள் உரிமையே நெருப்பு. அதுவே என்றென்றும் உங்கள் வெளிச்சத்தின் குடியிருப்பு! அறியாமை கிழித்து மீண்டும் பிறந்து வர‌ யுக அலைகளாய் திமிறி எழுங்கள்! உறுமி எழுங்கள்! தமிழ் வாழ்க! தமிழ் மக்களே வாழ்க! வாழ்க!! __________________________________________ சொற்கீரன் (17.06.25 அன்று எழுதிய‌ ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய மின்னல் ஊற்றுக் கவிதை தொட்டு தந்த என் வரிகள் இவை.) ____________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக