வியாழன், 12 ஜூன், 2025

எத்தனையாவது சங்கம்?

 

ஈரோடு தமிழன்பன் அவர்களே!

காகிதங்களின் கனவுக்கருப்பைக்குள்

விடியவே விரும்பாத‌

பாறைப் பாளமாய் கண்மூடிக்கிடக்கும்

வானத்தை

எப்படியெல்லாமோ

கிச்சு கிச்சு மூட்டி

அல்லது

கடமுடா எழுத்துக்களின்

சிக்கிமுக்கிக்கல் கொண்டு

பொறி கிளப்பியோ

கீற வைத்து வெளிச்சம் பிளக்க‌

எத்தனை கடு முயற்சிகள்...?

கவிதைச்சிறகுகளின்

வேடந்தாங்கல் இது.

எத்தனை கவிதைகள்?

எத்தனை கற்பனை ஊற்றுகள்?

சமுதாயச்சாயமே முக்கிக்கொள்ளாத‌

மூளி மவுன சொற்காடுகள்.

மூண்டெழுந்த நெருப்புச்சுவையில்

தோய்ந்து தோய்ந்து

எரிந்து அழல் வீசும்

சீற்றத்தின் பிரசவங்கள்.

மயிலிறகுகளின் நிழல்களில்

மனப்பிரளயங்களை

மடித்து வைத்து 

துடிக்க வைக்கும் வரிப் பாய்ச்சல்கள்.

உருவகமாய்

ஒரு கிளிஞ்சலை

கிள்ளி வைத்து

மொத்தக்கடலையும்

குடித்துத்தீர்க்கும் வேக வீச்சுகள்.

வரலாறுகளின்  அரிதாரம் பூசி

புரட்சித்தீயை பற்றவைக்கும்

சம்பவக்குவியல்களின்

சரித்திர மகரந்தங்களின் சிதறல்கள்.

அதன் பூவிரி கோலத்திலும்

ஒரு யுகத்தின் தலைவிரி கோலங்களை

அம்மணத்தின் வண்ணங்களில்

சிந்தனைகளை தெறிக்க விடுதல்கள்..

தமிழுக்கு

இது 

எத்தனையாவது சங்கம்?


________________________________________

சொற்கீரன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக