காக்கைச்சிறகினிலே....
_________________________________________
சொற்கீரன்
காக்கைச்சிறகினிலே
என்று
கருமை நிறத்துக்குள்ளே
கலந்து நின்று
சொற்கள் கடைத்தவன் அல்லவா
பாரதி!
தீக்குள்ளும் விரல் நுழைத்து
பார்த்தால் என்ன
என்று
தீண்டிப் பார்த்தவன் தான்.
அப்போதே திடுக்கிட்டிருப்பான்
இந்த
தீண்டாமையைத்தானே
அவனும் புல்லாங்குழலில் ஊதி ஊதி
கீதையில் சொன்னான்.
சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் என்று.
கோபிகையர்கள் எல்லாம்
தள்ளுபடி இல்லை.
ஆயினும் எப்படி இந்த
"தீண்டத் தகாத" மூலைகளுக்கும்
தீங்குழல் இசைத்ததாய்
இவர்கள்
சப்பளாக்கட்டைகளை அடித்து
சப்தம் எழுப்புகிறார்கள்?
கேட்டால்
அவதாரம் எனும் ரப்பர் பொம்மையை
எப்படி வேண்டுமானாலும்
கழுத்தைத்திருகி
கை கால்களை முறுக்கி
சுருட்டி மடக்கி
வைத்துக்கொள்ளலாம்.
அது நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளும்
என்று
புராணங்கள் சொல்வார்கள்.
கப்பலில் தத்தளித்து வருபவர்களுக்கு
"கலங்கரை"யாக அடையாளம் காட்டியதாயும்
சங்க இலக்கியங்கள்
கோடு காட்டியிருக்கலாம்.
பகுத்துண்டு வாழ
காக்கை கரைந்து கரைந்து
உண்டு காட்டிய
பாடம் ஒன்றே போதும்.
________________________________________________________
சொற்கீரன்
"கற்றுத்தரும் காக்கைகள்"
என்ற தலைப்பில் எழுதிய
ஈரோடு தமிழன்பன் அவர்கள்
24.06.25ல் எழுதிய கவிதையில்
ஒலித்த காக்காய்கள் பற்றிய பாட்டு.
____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக