கடலே தீப்பற்றி
எரிந்து கொண்டிருக்கிறது.
ஓட்டைப்படகின்
ஓட்டைகளை எண்ணிக்கொண்டு
இருப்பதில்
என்ன நிகழ்ந்து விடப்போகிறது?
மனிதம் முழுவதுமாக
தின்று தீர்க்கப்பட
விரையும்
மதவெறி
போர் வெறியாய்
வடிவங்கள் தாங்கும் இந்த
தருணங்களை
குலுக்கி குலுக்கி
சோழிகளாக்கி
நெருக்கடிக்கட்டங்களின்
சதுரங்கம் விளையாடுவதில்
பிணக்குவியல்களும்
நொறுங்கிய கட்டிடங்களின்
சடலங்களும்
என்ன நாகரிகம் பற்றி
இங்கே
வரலாறு எழுதுகின்றன?
கடவுளா?
தீர்க்கதரிசியா?
யார் முதலில்
மனிதனுக்கு
மைல்கல் நாட்டித்தந்தது?
வசனமா? வார்த்தையா?
எதை முதலில் உதிர்த்தன உதடுகள்?
உங்கள் பிணங்களின் கணக்குக்கு
நிச்சயம்
ஒரு நோபல் பரிசு
கொடுத்து விட வேண்டியது தான்.
மரணங்களை உமிழ்ந்த
வெடிமருந்து விற்ற காசு குவிந்ததில்
ஆண்டு தோறும்
பரிசு எனும்
ஒரு அசுரம் அலறுகிறது
ஜனனமாய்!
அதோ
குவா குவா என்று
குரல் எழுப்புகிறது.
அமைதி...
அழுகிறதா?
சிரிக்கிறதா?
அப்பாடா!
நடுநிலையாய்
எழுதியாகி விட்டது.
கல்லறையின் நடுநிலை இது.
________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக