ஞாயிறு, 1 ஜூன், 2025

"தமிழனாற்றுப்படை"

"தமிழனாற்றுப்படை"
_________________________________________


தமிழர்களே
தம் தமிழ் மூலம்
தமிழின் மீது காறி உமிழும்
ஒரு நரித்தந்திரம் 
இங்கே பல நூற்றாண்டுகளாக‌
எப்படி வந்தது?
இதை அறிந்து கொள்ளும் 
நுட்பம் 
தமிழனுக்கு இல்லையா?
அண்டை மாநில மக்களும் தான்
சமஸ்கிருதத்தில் 
புழுத்த புழுக்களாக‌
நெளிந்து கொண்டிருக்கின்றனர்.
ஆயினும்
அவர்களின் தாய்மொழிக்கு
என்றுமே
சுடரேந்திகளாக இருக்கிறார்கள்.
தமிழ் இங்கே
எப்படி தமிழையே
ஏறி மிதிக்கிறது?
லவ் தை நெய்பர்ஸ்
அஸ் தை செல்ஃப்
என்பது
அவர்களிடம் ஊறிப்போய்
ஒரு "கல் வெட்டு"த்தமிழ் ஆகிவிட்டது.
"மாற்றான் தோட்டத்து மல்லிகைகளில்" கூட‌
தமிழே மணக்கிறது
என்று நெகிழ்ந்து போகிறவன் ஆகிப்போன‌
பரிணாமே
இன்றைய அவன் முகவரி 
மற்றும் அகவரி.
இது 
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற‌
ஒரு உயர் தனிச்செம்மொழியின்
செவ்வியல் மாண்பு.
தமிழனுக்கு
இப்போது 
ஒரு ஆற்றுப்படை தேவைப்படுகிறது.
அது தனக்குத்தானே எழுதிக்கொள்ளும்
அவனது
"தமிழனாற்றுப்படை"

_________________________________________________
சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக