படம் முடியப்போகிறது.
கதை என்ன?
எங்கே தொடங்கும்
தேடிக்கொண்டு அல்லவா
இருக்கிறேன்.
அது எங்கே தொடங்கியது?
அந்த நூலை விட்டு விட்டேனோ?
அது எங்கே பறந்து கொண்டிருக்குமோ?
அந்தக் கனவின் சுவடுகளை
எங்கே என்று தேடுவது?
அந்த ஆற்றின் ஓட்டத்தில்
பாய்ந்து சென்று விட்ட
முதல் திவலையை
அதற்கும் முன்னும் பாயும் அந்த
துளியின் கூந்தலை
எட்டிப்பிடித்து விடமுடியுமோ?
அந்த கதையை
ஒரு "சொல்" சுருக்கமாகவாவது
சொல்லிவிட்டுப் போகமுடியாதா
உன்னால்?
என்னால் பின் தொடர முடியவில்லையே?
அப்படியா
சொல் என்ன ..சொல்
இதோ வீசிவிட்டேன்.
அதோ மிதந்து மிதந்து வருகிறது.
சொல் அல்ல.
பூ.
ஒரு குவளைப்பூ.
ஆம் அது விழித்து விழித்துப்
பார்க்கும் ஒரு "பார்வை".
ஒரு வாழ்க்கை
எப்படி அப்படி பார்க்க முடியும்?
பார்த்துக்கொண்டே தான் வருகிறது
அந்த விழி
என்னை நோக்கி.
அந்த கதையின் ஓட்டம் எங்கோ
போய் விட்டது.
அந்த வாழ்க்கை என்னைப்பார்த்து விட்டது.
போ...போய் வாழ்ந்து காட்டு
என்று அது வந்து கொண்டிருக்கிறது.
எப்படி?
நீ பிய்ந்து போய் எங்கோ
ஓடிக்கொண்டிருக்கிறாய்.
அந்தக் கனவில் கூட அச்சிடப்படாத
மூளி ஏக்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு
நான் என்ன செய்ய?
ஆம்.
நான் என்ன செய்ய?
படம் முடிந்து விட்டதே!
"சுபம்"
போட்டுவிட்டார்களே.
வெற்று வெள்ளைத்திரை
என் முன்னே நிழல் ஆடுகிறது.
_________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக