திங்கள், 3 மே, 2021

இவன் தந்தைக்கு எந்நோற்றான்...

 இவன் தந்தைக்கு எந்நோற்றான்...

_________________________________________________________

ருத்ரா.



வெற்றிடம் என்றார்கள்.

இவனா அந்த தலைவன் என்றார்கள்.

திராவிடச்சுவடே இருக்கக்கூடாது

என்றார்கள்.

இவன் ஒரு கால் இந்த‌

ஆரியத்தை அடித்து நொறுக்கும்

பூகம்பமாக இருப்பானோ

என்ற பயம்

அவர்கள் தண்டுவடத்துக்குள்

நண்டுகள் சுரண்டியது போல்

இருந்தது.

பங்காளி எதிரிகள்

பகடைக்காயாக இருந்து விட்டுபோவோம்

அதனாலென்ன?

மூட்டை மூட்டையாய் பணம்.

குடித்தீவுகள் பட்டா.

தமிழ் மண்ணாவது புண்ணாக்கவது?

என்று

அநாகரிகக்கோமாளிகள் ஆனார்கள்.

அவர்களுக்கு 

சில்லூண்டி நையாண்டி மேளங்கள் 

கொட்ட‌

ஓரிரண்டு கும்பல்கள்...

இவன்

தயங்கவில்லை

கலங்கவில்லை

மயங்கவில்லை

பத்து பதினைந்து லட்சங்கள்

என்று மக்களை பிணக்குவியல்

ஆக்கிய ஹிட்லருக்கு

ஆப்பு வைத்தனின் 

வைர நெஞ்சம் அல்லவா

அவன் பெயரில்

அக்கினிநாளங்களாக‌

துடித்துக்கொண்டிருக்கிறது.

பொதுஉடைமைப் பூங்காவின்

சிந்தனைத்தளிர்களில்

நெருப்பு மகரந்தங்களைத்தூவிய‌

சிகப்பு விடியலின் சிம்னி விளக்கை ஏந்தி

வெளிச்சம் தேடிய கலைஞரின்

செல்வன் அல்லவா இவன்!

பெரியார் பகுத்தறிவையும்

சமூக சமநீதிக்கொள்கைகளையும்

தமிழ் நாட்டின் தனித்தன்மையையும்

தன்னாட்சித்திறன் கொண்ட‌

தமிழ்க் கதிர்வீச்சையும்

தன் படை வரிசைகள் ஆக்கி

கணிப்பொறிகள் மிடைந்த‌

அந்த குருட்சேத்திரத்தில்

அன்று 

ஆரியப்படை கடந்த தமிழன்

வகுத்த வியூகம் போல்

தேர்தல் திறம் காட்டி நின்றான்

இவன்.

விடியல் தரப்போறான் இவன்

என்ற அதிர்குரலில்

முழங்கிய போர்ப்பரணி

அந்த சனாதன வல்லூறுக்கூட்டங்களை

வெல வெலக்க வைத்தது.

இவன்

இன்று வெற்றி மாலை சூடிவிட்டான்.

தமிழ் மொழியும் நாடும்

ஓர்மை கொண்டது.

கூர்மை மழுங்கிப்போகவில்லை

அந்த புறநானூற்றுத்தமிழ்.

புல்லறிவாளர்கள் மனம்

புழுங்கி கக்கிய‌

விஷமச்சொற்கள் எல்லாம்

புழுதிமண்ணாய் பறந்தோடியது.

"தீய கட்சி..."

தமிழ்ப்பகைவர்கள் மூச்சுக்கு மூச்சு

முனகிக்கொண்டிருந்தார்கள் இப்படி.

ஓ!

என்னருமைத்தமிழ் மக்களே

அந்த ஒட்டுக்கந்தல் கோமாளிகளை

ஓட ஓட விரட்டியவன் அல்லவா

இவன்!

திராவிடத்தின் சுடரேந்தியாய்

உலகத்தமிழனை இமை உயர்த்தி

வியக்க வைத்தவன் அல்லவா

இவன்!

தமிழனின் போரும் போர்சார்ந்த நிலமுமாக‌

விளங்கிய அந்த‌

சிவப்பு மெரீனாவை

திராவிடச்சுடுகாடு என்று 

கொக்கரித்த அரைவேக்காட்டுகுரல்

கோமான்களின் வர்ணதந்திரங்களை

தோலுரித்துக்காட்டிய தீரன் அல்லவா 

இவன்!

தமிழ் மண்ணின் குற‌ளோவியத்தை

குமரி முனையில்

உலகத்தின் கலங்கரை விளக்கமாக்கிய‌

அவனுக்கு

"இவன் தந்தைக்கு என் நோற்றான் கொல் எனும்

சொல்"தந்து

தமிழ்க்காவியமாய் ஒளிர்ந்து நிற்பவன் அல்லவா

இவன்!

வாழ்க இவன்!

வெல்க இவன்!

தமிழாற்றுப்படையாய் இனி

எத்திசையும்

எஞ்ஞான்றும்

இவன்

வாழ்க! வாழ்க! வாழ்கவே


_____________________________ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக