திங்கள், 10 மே, 2021

ஒரு ஆங்கிலப்படம்

 


ஒரு ஆங்கிலப்படம் தான் 

நினைவுக்கு வருகிறது.

அது"வாட்டர் வொர்ல்ட்".

சுற்றிலும் கடல்.

ஒதுங்க  

மண்திட்டு கொஞ்சம் கூட இல்லை.

யாரோ  வில்லன்கள் 

ஏதோ ஒரு விசைக்கப்பலை 

வைத்துக்கொண்டு கிடைத்ததை 

கொள்ளை அடிக்கிறார்கள்.

இந்த கொரோனாவும் அப்படி 

ஒரு பிணக்கடலாய் நம்மைச்சூழ்ந்து

அச்சுறுத்துகின்றது.

மருத்துவமனைப்பற்றாக்குறைகள்

அதன் கட்டணங்கள் 

ஆக்சிஜன் சிலிண்டர்

ரெம்டெசிவர்கள் 

தடுப்பூசிகள் போன்றவை 

சுராக்களின் கோரப்பற்களாய்

நம்மையெல்லம் அப்படித்தான் 

ஒரு திகில் கடலில் ஆழ்த்துகிறது.

மனிதனின் விஞ்ஞான ஆராய்ச்சி 

எங்கோ மூழ்காமல் மூழ்கி 

மனிதனை மூழ்கிவிடாமல் காக்க 

முயன்று கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் பூதங்கள் கூட‌

தலை காட்டுகின்றன.

ஆனாலும் அவை மானிட "சந்தைகளை"

காப்பாற்றவே துடிக்கின்றன.

அவற்றுக்கு நம் வாழ்த்துக்கள்.

அந்த மனித மூச்சில்

ஆதாம் ஏவாள் மற்றும் நோவாக்கப்பல்

இன்னும் ஆலிலை கிருஷ்ணன் புராணங்கள் 

எல்லாம் குமிழிகள் இடுகின்றன.

பஃறுளியாறும் பன்மலை அடுக்கமும்

பாதாம் அல்வா போல்

அந்த கடல் கோள் வாய்களில்

விழுங்கப்படும் காட்சியும் நம்

இமை விளிம்பு வரை அலை அடிக்கிறது.

மனித முயற்சி

மனித நம்பிக்கை

மனிதனின் திரண்ட கூரிய அறிவு

எல்லாம்

உருண்டு திரள்கிறது!

ஒரு மாபெரும் உந்து விசை 

மனிதக்கால்களில் எம்பி எழுந்துவிட 

அதோ ஒரு 

நம்பிக்கையின் கீற்று தலைகாட்டுகிறது.

சடலங்கள் குவிந்தாலும் 

சரித்திரத்தின் உயிரொளியில்

முனைந்து எழும்

அந்த‌ 

வெற்றி நமதே.வெற்றி நமதே!

________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக